Friday, 27 September 2013

பார்வையற்றவர்களை அலைக்கழிப்பதா? வக்கீல் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ்



சென்னை : வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரி பார்வையற்றோர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பான வழக்கில், தமிழக அரசின் தலைமை செயலாளர் 3,ம் தேதிக்குள் பதில் அளிக்க ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் முகமது நஸ்ருல்லா தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:

கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற பட்டதாரிகள், சென்னையில் பல இடங்களில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர் களை போலீசார் கைது செய்து கல்பாக்கம், மதுராந்ததகம் போன்ற பகுதிகளில் விட்டுவிடுகிறார்கள். சிலரை சுடுகாட்டில் விட்டுவிட்டார்கள். இதனால், பார்வையற்ற பட்டதாரிகள் இரவு நேரத்தில் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடஒதுக்கீட்டில் 2 சதவீதம் பார்வையற்றவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் உத்தரவிட்டும், கடந்த 5 ஆண்டுகளாக அரசு அமல்படுத்தவில்லை.

இதை கண்டித்துதான் பார்வையற்றோர் 10 நாட்களாக போராடுகிறார்கள். நீதிமன்றம் இதை கருத்தில்கொண்டு பொதுநல வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும். நானும் பார்வையற்ற வழக்கறிஞர் என்பதால் கோரிக்கை வைக்கிறேன். இந்த மனுவை கனிவுடன் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த கடிதத்தையே பொதுநல மனுவாக கருதி தற்காலிக தலைமை நீதிபதி அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று விசாரணை நடத்தி, வரும் 3ந் தேதி தமிழக அரசின் தலைமை செயலாளர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.



No comments:

Post a Comment