Monday, 7 April 2014

வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் பங்கேற்காத அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை

வாக்குச்சாவடி பயிற்சி முகாமில் கலந்து கொள்ளாத 2241 அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரியுமான பாஸ்கரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் தனி தொகுதி மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு வாக்குச் சாவடி அலுவலர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட 16,143 அலுவலர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், மதுராந்தகம், புனித தோமையார்மலை உள்ளிட்ட 12 மையங்களில் முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் கடந்த 3ந்தேதி நடைபெற்றது.இதில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி கையாள்வது? வாக்குச் சாவடி மையங்களில் எப்படி பணியாற்றுவது? குறித்து அவர்களுக்கு விளக்கம் தரப்பட்டது. இதில் ஆசிரியர்கள் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமில் 2241 பேர் கலந்து கொள்ளவில்லை.பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மீது விளக்கம் கேட்கப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment