கடலூர்: மாவட்டத்தில் உள்ள 209 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை சிறப்பு குழு நியமித்துள்ளது.
கடலூர் மாவட்டமானது, கடலூர் மற்றும் விருத்தாசலம் என, இரண்டு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கியது. மாவட்டத்தில் உள்ள, 118 அரசு உயர்நிலை பள்ளிகள், 91 மேல்நிலைப் பள்ளிகளில் 2013-14ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்கும் பொருட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டது. குறிப்பாக, பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு ஏற்கனவே, பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் நடத்தப்பட்டது. மேலும், தேர்வுகளில் கேட்கப்பட்ட முக்கிய வினாக்கள் அடங்கிய புத்தகமும் இலவசமாக வழங்கப்பட்டது. இதன் பயனாக, மாவட்டம், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.71 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இது கடந்தாண்டை காட்டிலும் 8.5 சதவீதம் அதிகமாகும்.அதேப் போன்று, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மாவட்டம், 84.16 சதவீதம் தேர்ச்சி பெற்றது. இது கடந்தாண்டை காட்டிலும் 11.37 சதவீதம் அதிகமாகும். கடந்த 2013-14ம் கல்வியாண்டை போலவே, இந்த 2014-15ம் கல்வியாண்டிலும் பொதுத் தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க முதன்மைக் கல்வி அலுவலகம் முடிவு செய்துள்ளது. இதற்காக, பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு, சிறப்பு வகுப்புகள், வாராந்திர தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. இதனை கண்காணிக்க, தாலுகா வாரியாக 8 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாலுகாவிலும் அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூவரும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூவரும் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு குழுவும் நான்கு முதல், 5 பள்ளிகள் வரை, நேரில் சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "2013-14ம் கல்வியாண்டில் சிறப்பு வகுப்புகள் இரண்டு, மூன்று மாதங்கள் மட்டுமே நடந்தது. போதிய ஆர்வம் இல்லாததால், நாளடைவில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இந்தாண்டு பொதுத் தேர்வு முடியும் வரை, சிறப்பு வகுப்புகளை கண்காணிக்க இந்த சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது' என்றார்.
No comments:
Post a Comment