Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Saturday 30 November 2013

மாணவ–மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் முத்து பழனிச்சாமி

மாணவ–மாணவிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க வேலூர் மாவட்டத்தில் உள்ள 2,303 ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் முத்து பழனிச்சாமி தெரிவித்தார்.
புத்தாக்கப்பயிற்சிகள்
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள், அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் பொருட்டு வேலூர் மாவட்டத்தில் 9 இடங்களில் ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. குடியாத்தத்தில் கே.எம்.ஜி கல்லூரியில் நடந்துவரும் ஆசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி வகுப்புகளை பார்வையிட்ட பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் டாக்டர் முத்துபழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:–
வேலூர் மாவட்டத்தில் 10–ம் வகுப்பு மற்றும் 12–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை அதிகரிக்கும் பொருட்டு அனைத்து 10 மற்றும் 12–ம் வகுப்பு பாட ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான புத்தாக்கப் பயிற்சிகள் 9 இடங்களில் நடைபெற்று வருகிறது.
மாநில தேர்ச்சி சராசரியை விட குறைவு
மாநிலத்தில் 10–ம் வகுப்பு தேர்ச்சி சராசரி 89 சதவீதம். வேலூர் மாவட்டம் 83 சதவீதமாக உள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் தேர்ச்சி சராசரி 88 சதவீதம். வேலூர் மாவட்டம் 81 சதவீதமாக உள்ளது. மாநில சராசரி தேர்ச்சியை விட வேலூர் மாவட்டம் தேர்ச்சி குறைவாக உள்ளதால் பாட ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 2 ஆயிரத்து 403 ஆசிரியர்கள் புத்தாக்கப் பயிற்சி பெறுகிறார்கள். 54 கருத்தாளர்கள், 18 தலைமைஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் பயிற்சி அளித்து வருகிறார்கள். குறிப்பாக சில பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி விழுக்காடு வழங்கிய ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிப்பதால் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளிகளில் பின்தங்கிய மாணவர்களுக்கு எளிதான பாடங்களை சொல்லி கொடுக்கவும், மாதிரி வினாக்கள் கூறியும் அதிக மதிப்பெண்கள் பெற்று எளிதில் தேர்ச்சி பெற முடியும். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற முடியும்.
காலிப்பணியிடங்கள் இல்லை
மேலும் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் காலி இடங்களுக்கு 779 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்கள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, நேர்முக உதவியாளர் ஜோதீஸ்வரன், பள்ளி துணை ஆய்வாளர்கள் மணிவாசகன், தாமோதரன், கே.எம்.ஜி கல்லூரி நிர்வாகிகள் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.சுந்தரவதனம், தலைமைஆசிரியர்கள் மகராஜன், விநாயகம் உள்பட பலர் இருந்தனர்.

No comments:

Post a Comment