இதுவரை, 30 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை மூட, விருப்பம் தெரிவித்து, அதன் நிர்வாகிகள், தமிழக அரசிடம், கடிதம் கொடுத்து உள்ளனர். மாணவர் சேர்க்கை துவங்குவதற்குள், மேலும் பல பள்ளிகள் மூடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, மாணவர் மத்தியில் வரவேற்பு குறைந்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும், 50 தனியார் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. வரும் கல்வி ஆண்டில், 30 பள்ளிகளை மூட, அதன் நிர்வாகிகள், கடிதம் கொடுத்து உள்ளனர். பெங்களூரில் உள்ள, ஆசிரியர் கல்விக்கான தென் மண்டல குழுவிடம் (என்.சி.டி.இ.,), பள்ளியை மூடுவதற்கு, பள்ளி நிர்வாகங்கள் விண்ணப்பித்தன. இதை ஏற்று, சம்பந்தப்பட்ட பள்ளிகளை மூடிக்கொள்ள, என்.சி.டி.இ., அனுமதி அளித்துள்ளது. அந்த கடிதத்தை, தமிழக ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்திடம், பள்ளி நிர்வாகிகள் சமர்ப்பித்து உள்ளனர். துறை வட்டாரம் கூறுகையில், 'மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்குவதற்குள், மேலும், 30 பள்ளிகள் வரை மூடப்படலாம்' என, தெரிவித்தது. தற்போதைய நிலவரப்படி, அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 38, அரசு உதவி பெறும் பள்ளிகள், 42, தனியார் பள்ளிகள், 450 உள்ளன. இதில், தனியார் பள்ளிகளில், 30 பள்ளிகள் மூடுவது உறுதியாகி உள்ளது. மே, இரண்டாவது வாரம், ஆசிரியர் பயிற்சிக்கு, இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும் வகையில், அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், கடந்த ஆண்டு, 4,000த்திற்கும் குறைவான இடங்களே நிரம்பின.
No comments:
Post a Comment