சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய விதிமுறைகளை கடைபிடிக்காத 10 தனியார் பள்ளி வாகனங்களுக்கு தற்காலிகமாக தரச்சான்று (எப்.சி.) உரிமம் ரத்து செய்யப்பட்டது.
தரச்சான்று உரிமம் ரத்து- சென்னை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட பள்ளி வாகனங்களுக்கான விதிமுறை சோதனை நந்தனம் ஆடவர் கலைக்கல்லூரியில் நேற்று நடந்தது. இதில் சென்னை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழு பள்ளி வாகனங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மொத்தம் 30 தனியார் பள்ளி வாகனங்கள் மீதான இந்த சோதனையில், 10 வாகனங்களுக்கு தரச்சான்று உரிமம் ரத்து செய்யப்பட்டது. மற்ற வாகனங்களை அதிகாரிகளே ஓட்டிப்பார்த்தும் சோதனை செய்தனர். சோதனையின் முடிவில் ஆய்வு குறித்த தகவல்கள் அதிகாரிகளால் குறிக்கப்பட்டது.
6 மாதங்களுக்கு ஒருமுறை...இதுகுறித்து சென்னை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜி.அசோக்குமார் கூறியதாவது:–
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 33 குழுக்கள் இந்த வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒருமுறை இந்த சோதனை நடத்தப்படுகிறது.
நேற்று நடந்த இந்த தனியார் பள்ளி வாகனங்கள் சோதனையில் சென்னை மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட 30 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. இந்த சோதனையில் 10 தனியார் பள்ளி வாகனங்கள் சுப்ரீம் கோர்ட்டின் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இருந்தது தெரியவந்தது.
ஒரு வாரம் அவகாசம்-இந்த 10 தனியார் பள்ளி வாகனங்களின் தரச்சான்று (எப்.சி.) உரிமம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளோம். இன்னும் ஒரு வார கால அவகாசத்துக்குள் தனியார் பள்ளி வாகனங்களில் நாங்கள் குறிப்பிட்ட குறைகள் சரிசெய்து ஆய்வுக்கு கொண்டுவரவேண்டும். அவ்வாறு செய்யாமல் போனால், வாகனங்களின் தரச்சான்று உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டு விடும்.இவ்வாறு அவர் கூறினார்.
தனியார் பள்ளி வாகனங்களின் மீதான சோதனை வரும் 20–ந்தேதி (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment