Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 31 March 2014

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்)

வாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWER POINT வடிவில்) 

இதை விட விளக்கமாக சொல்ல முடியாது. பட விளக்கத்துடன் அருமையாக விளக்கப் பட்டுள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் (முக்கியமாக வாக்கு சாவடி தலைமை அலுவலர்கள்) பதிவிறக்கம் செய்து கொள்வது நல்லது.

Pls Click Here

10% அகவிலைப்படி உயர்வு எப்போது? மத்திய அரசு ஆணை வெளியிட்ட பிறகும் தமிழக அரசு மவுனம் .தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள்எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. இதனால் ஏற்கனவே பெற்று வந்த 90 சதவீத அகவிலைப்படியுடன் 10 சதவீதம் புதியதாக வழங்கப்பட்டு மொத்தம் 100 சதவீத அகவிலைப் படி உயர்வு வழங்கப்பட்டதுஅதற்கான் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது
.மத்திய அரசை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசு ஊழியர்கள், ஆசிரிய சங்கங்கங்கள் கோரிக்கைகளை விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை மாநில அரசு இதுதொடர்பாக உத்தரவு ஏதும் பிறப்பிக்காததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே, மத்திய அரசு ஊழியர்களை போல் மாநில அரசு ஊழியர்களுக்கும் 10 சதவீத அகவிலைப்படி உயர்வை கடந்த ஜனவரி மாதம் 1ம் தேதியை கணக்கிட்டு மொத்தம் 100சதவீத அகவிலைப்படி வழங்க தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் விரும்புகின்றனர்.

3 மாதங்களில் 800 பேர் மாயம் - மாணவியர் எண்ணிக்கை அதிகம்

தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் 800 பேர் மாயமாகி உள்ளனர். இப்பட்டியலில், மாணவியர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தேர்வில் தோல்வி, காதல் தோல்வி, குடும்ப பிரச்னை உள்ளிட்ட காரணங்களால், வீட்டை விட்டு வெளியேறுபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டில் 2,413 பேர் காணாமல் போய் உள்ளனர். அந்த வரிசையில், நடப்பு ஆண்டில் மார்ச் 23ம் தேதி வரை தமிழகம் முழுவதும் 800 பேர் வரை காணாமல் போயுள்ளனர் என காவல்துறையில் புகார்கள் பெறப்பட்டு உள்ளன.
இப்பட்டியலில், சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 202 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பள்ளி, கல்லூரி மாணவியர். குடும்ப பிரச்னைகளால், ஏழு பெண்கள் காணாமல் போயுள்ளனர்.
மதுரை, 46, வேலூர், 37, காஞ்சிபுரம், 35, சேலம், 28, தேனி, 26, தஞ்சை, 22, நெல்லை, 21, விழுப்பும், 18, விருதுநகர், 17, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பேர் காணாமல் போயுள்ளனர். காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள், போட்டோக்களுடன், காவல்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்., 23, காலை 11.00 மணிக்குள் இருக்கணும்; ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு உத்தரவு


திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளிலும் பணியாற்ற உள்ள, ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 2,120 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும், ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர் மற்றும் மூன்று ஓட்டுப்பதிவு அலுவலர்கள் என மொத்தம் 10 ஆயிரத்து 176 ஊழியர்கள் பணியாற்ற உள்ளனர். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், வரும் ஏப்., 23ம் தேதி காலை 11.00 மணிக்கு, ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டும். ஓட்டுச்சாவடியை சுற்றி, 200 மீட்டர் தூரத்தில், கட்சி சின்னங்களோ, கொடிக்கம்பங்களோ, விளம்பரங்களோ இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.ஓட்டுச்சாவடிக்கு வரும் பகுதிகள், வேட்பாளர் பெயர்களை, சுவற்றில் ஒட்டி வைக்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். முன்னதாக, கட்சிகளின் பூத் ஏஜன்ட் நியமனம், இருக்கை ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளையும் செய்து முடிக்க வேண்டும். ஏப்., 24ம் தேதி காலை 6.00 மணிக்கு, பூத் ஏஜன்டுகள் முன்னிலையில், மாதிரி ஓட்டுப்பதிவு நடத்திப் பார்க்க வேண்டும். அதன்பின், காலை 7.00 முதல் மாலை 6.00 மணி வரை ஓட்டுப்பவு நடத்த வேண்டும். தேர்தல் கமிஷன் வழங்கும் படிவத்தில், பார்வையாளர்களிடம் குறிப்பு எழுதி பெற வேண்டும். இதேபோல், ஓட்டுப்பதிவு அலுவலர் 1, 2 மற்றும் 3 ஆகியோருக்கும் பல்வேறு பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு தொகுதியிலும், தேர்தல் பிரிவு அதிகாரிகளும், மண்டல அதிகாரிகளும் நேற்று ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு, நஞ்சப்பா பள்ளியிலும், தெற்கு தொகுதிக்கு, ஜெய்வாபாய் பள்ளியிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக, அவர்களுடைய தொகுதி மற்றும் வாக்காளர் பட்டியல் விவரங்களை பெற, படிவம் 12 மற்றும் 12ஏ ஆகிய படிவங்களை வழங்கி, பூர்த்தி செய்து பெற்றுக்கொண்டனர். அடுத்ததாக, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், ஓட்டுப்பதிவு, "கன்ட்ரோல்' யூனிட்டை இயக்குவது குறித்து "பவர் பாயின்ட்' மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு அடையாள அட்டை வழங்க, அவர்களை பற்றிய விவரம் பெற்று, போட்டோ எடுக்கப்பட்டது. அடுத்த பயிற்சியின் போது, கூடுதல் விவரங்கள் அறிவிக்கப்படும். இறுதி கூட்டத்தில், தபால் ஓட்டு பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவக்கல்லூரிகளில், படிக்கும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு

அரசு மருத்துவக்கல்லூரிகளில், படிக்கும் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைக்க,'' மருத்துவ கல்வி இயக்குனர் கீதாலட்சுமி உத்தரவிட்டார். தமிழகத்தில்,அரசு மருத்துவ கல்லூரிகளில், முதல் பட்டதாரிகளாக சேரும், மாணவர்களுக்கு அவர்களது,கல்வி கட்டணம் (டியூசன் பீஸ்) திரும்ப ஒப்படைக்கப்படும் என, அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில், கடந்த கல்வி ஆண்டில், மருத்துவ கல்லூரிகளில், கல்வி கட்டணம் செலுத்திய, முதல் பட்டதாரி மாணவ, மாணவிகள் செலுத்திய, கட்டணத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்குமாறு, மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூ.15 லட்சத்தை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. கல்விக்கட்டணத்தை திரும்ப ஒப்படைத்து, அதற்கான ஒப்புதல் கடிதத்தை, மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அனுப்புமாறு, அரசு மருத்துவ கல்லூரிகளின் டீன்களுக்கு,மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில், படிக்கும் 16 முதல் பட்டதாரி மாணவர்களிடம், பெற்ற தலா ரூ.4,000 கல்விக் கட்டண தொகையை, திரும்ப ஒப்படைக்க,சிவகங்கை கல்லூரிக்கு, அரசு ரூ.64 ஆயிரம் ஒதுக்கியுள்ளது

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்கள் கடை பிடிக்க வேண்டிய விதிமுறைகள்

கோவை லோக்சபா தொகுதியில் தேர்தல் பணியாற்றவுள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.
கோவை தெற்கு தொகுதி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நிர்மலா கல்லுாரியிலும்; சிங்காநல்லுார் தொகுதிக்கு பெர்க்ஸ் பள்ளியிலும்; கோவை வடக்கு தொகுதிக்கு கிக்கானி பள்ளியிலும்; கவுண்டம்பாளையம் தொகுதிக்கு சி.எம்.எஸ்., பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.
ஒரு ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலர் ஒருவர், ஓட்டுப்பதிவு அலுவலர்கள் மூன்று பேர் பணியமர்த்தப்படுகின்றனர். ஓட்டுச்சாவடியில் மொத்தம் நான்கு பேர் பணியில் இருப்பர். ஒவ்வொரு தொகுதிக்கும் ௨௦ சதவீதம் அலுவலர்கள் கூடுதலாக தேர்வு செய்யப்பட்டு பயற்சி கொடுக்கப்படுகிறது.ஓட்டுப்பதிவு, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை கையாள்வது பற்றி, வீடியோ காட்சிகள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. அதன்பின், செயல்விளக்கமளித்து, மாதிரி ஓட்டுப்பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் தெரிவித்த தகவல் வருமாறு:
தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர் மற்றும் மண்டல தேர்தல் அலுவலர்கள் தேர்தல் நடத்தும் பணியில் ஈடுபடுவர். ஒட்டுச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பேலட் பேப்பர்கள் உள்ளிட்ட ௮௬ வகையான ஓட்டுப்பதிவு உபகரணங்கள், மண்டல தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒப்படைப்பார்கள். ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலர் அவற்றை பெற்று, பாதுகாக்க வேண்டும். மின்னணு இயந்திரங்களில் கோளாறு இருந்தால், உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேர்தலன்று, ஓட்டுப்பதிவு துவங்கும் முன், வேட்பாளர்களின் பூத் ஏஜன்ட்டுகள் முன்னிலையில் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்த வேண்டும். பூத் ஏஜன்ட்களிடம் படிவங்களில் கையெழுத்து பெற்று, மின்னணு இயந்திரத்துக்கு 'சீல்' வைக்க வேண்டும். அதன்பின், எக்காரணம் கொண்டும், 'சீல்' அகற்றக்கூடாது. மின்னணு இயந்திரம் செயலிழந்து விட்டால், ஓட்டுப்பதிவை நிறுத்தம் செய்து, உடனடியாக மாற்று இயந்திரம் பெற்று, அதையும் வழக்கமான 'சோதனைகள்' செய்து, ஓட்டுப்பதிவை தொடர வேண்டும். வாக்காளர் பட்டியல், படிவங்கள், விரலில் மை வைப்பது போன்ற பணிகளை ஒட்டுப்பதிவு அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். அலுவலர்களுக்கு தேவையான காலை, மதிய, இரவு உணவை சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். கட்சியினரிடம் இருந்து உணவு, குடிநீர், குளிர்பானங்கள், நொறுக்குத்தீனி பெறுவது சட்டப்படி குற்றம். ஓட்டுப்பதிவின்போது தகராறு, பிரச்னை செய்வோரையும், கள்ளஓட்டு போடுவோரை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஓட்டுச்சாவடிக்குள் தகராறு செய்பவரையும், யாருக்கு ஓட்டுப்போகிறேன் என வெளிப்படையாக அறிவித்தவரையும், 'ஓட்டளிக்க மறுக்கப்படுகிறது' என, பதிவு செய்து வெளியேற்ற வேண்டும்.
ஓட்டுப்போட வாக்காளர் வரும்போது, பூத் ஏஜன்ட் ஆட்சேபனை தெரிவித்தால், 'சேலஞ்ச்' ஓட்டு பதிவு செய்யலாம். அதற்கு 'பூத் ஏஜன்டிடம்' 2௦ ரூபாய் பணம் பெற்று, ஓட்டுப்போடுபவரின் ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டும். ஆவணம் சரியாக இருந்தால் ஓட்டளிக்க அனுமதிக்கலாம். சேலஞ்ச் ஓட்டு பதிவு செய்யப்பட்டால், 2௦ ரூபாய் அரசுக்கு சொந்தம்; சரியான ஆவணங்கள் இல்லாவிட்டால், 20 ரூபாயை பூத் ஏஜன்ட்டிடம் திரும்ப கொடுத்து, ஓட்டு போட 
முயன்றவரை போலீசில் ஒப்படைக்க வேண்டும்.
சரியான ஆவணங்களுடன் ஓட்டுப்போட வரும்போது, அவரது ஓட்டு ஏற்கனவே பதிவு செய்திருந்தால், ஓட்டுப்போட வந்தவருக்கு 'டெண்டேடு' ஓட்டளிக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதற்காக ஓட்டுச்சாவடிக்கு 20 'பேலட் பேப்பர்கள்' வழங்கப்பட்டிருக்கும். 'பேலட் பேப்பரில்' முத்திரை வைத்து ஓட்டளிக்க அனுமதிக்க வேண்டும். கண் பார்வையற்றோர் ஓட்டளிக்க வந்தால், அவருக்கு உதவியாக ஒருவரை அனுமதிக்க வேண்டும். மின்னணு இயந்திரம் இருக்கும் இடத்திற்கு கண் பார்வையற்றவரை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மின்னணு இயந்திரத்தை தடவிப் பார்த்து, ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு நடைமுறைகள் அனைத்தையும் படிவம் '௧௭ சி'யில் பதிவு செய்ய வேண்டும். மின்னணு இயந்திரத்தை, மண்டல தேர்தல் அலுவலர்களிடம் ஒப்படைக்கும் வரையிலும், ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலரே பொறுப்பாளர் ஆவார். ஓட்டுப்பதிவு தவறுகள் நடந்தால், ஓட்டுப்பதிவு முதன்மை அலுவலர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஓட்டுப்பதிவு அலுவலர்கள், அந்தந்த சட்டசபை தொகுதிக்குள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தால், அவர்களுக்கு வழங்கியுள்ள 'யுனிகோடு' எண்களை பயன்படுத்தி, பணியாற்றும் ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்போட்டுக்கொள்ளலாம். வேறு தொகுதியில் தேர்தல் பணியமர்த்தப்பட்டால், தபால் ஓட்டு போட வேண்டும். இவ்வாறு, பயிற்சி வகுப்பில் தெரிவிக்கப்பட்டது.

வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 மாணவர்களுக்கு வகுப்பு முன்னதாக தொடக்கம்


வரும் கல்வி ஆண்டில் பிளஸ்1 வகுப்புக்கு செல்லும் மாணவர்களுக்கு நீண்ட நாள் கோடை விடுமுறை அளிப்பதை தவிர்த்து,  விரைவில் பள்ளிகளில் அவர்களுக்கு சேர்க்கை நடத்தி வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 16ம் தேதி பிளஸ்1 வகுப் புகளை தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஆண்டை விட முன்னதாக வெளியிடப்படும்.  அதாவது நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் 10ம் வகுப்பு ரிசலட் வர வாய்ப்புள்ளது.

கடந்த ஆண்டு மே 31ம் தேதி 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியிடப்பட்டு ஜூன் 24ல் பிளஸ்1 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்தாண்டு 1 வாரம்  முன்னதாகவே வகுப்புகள் தொடங்கப்படும். தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு கோடை விடுமு றைக்குப் பின்னர் ஜூன் 2ம் தேதி வகுப்புகள் துவங்க உள்ளன. வெயில் காரணமாக சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் ஜூன் 4ம் தேதி பள் ளிகளை திறக்க முடிவு செய்துள்ளன. கடந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக இருந்ததால் கோடை விடுமுறை நீடிக்கப்பட்டது.

உண்டு உறைவிட பள்ளிகளை மூடியதால் மாணவர்கள் அவதி:

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள உண்டு உறைவிட பள்ளிகளை, திடீர் என மூட உத்தரவிட்டுள்ளதால், மாணவர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களை அதிகம் கொண்ட மாவட்டம் ஆகும். மேலும், கல்வி மற்றும் மற்றும் தொழில் வளர்ச்சியில், மிகவும் பின் தங்கிய மாவட்டம் ஆகும். மாவட்டத்தில், விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், இம்மாவட்ட மக்கள் வேலை தேடி, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் அருகில் உள்ள கர்நாடகா மாநிலத்துக்கு அதிகளவில் குடும்பத்தோடு, வேலை தேடி சென்று வருகின்றனர். மேலும், பல பெற்றோர் குடும்ப வருமானத்துக்காக, தங்களது குழந்தைகளை வேலைக்கு அனுப்பி வந்தனர். இதனால், மாவட்டத்தில் பள்ளியில் இருந்து இடையில் நிற்கும் குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும், வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலத்துக்கு வேலை தேடி செல்லும் பெற்றோர் தங்களது பெண் குழந்தைகளை அதிகளவில் குழந்தை திருமணம் செய்து வைத்தனர். இதே போன்று, தர்மபுரி உட்பட வேறு பல மாவட்டங்களிலும் இந்நிலை தொடர்ந்தது.
இதையடுத்து, தர்மபுரி மாவட்டம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளியில் இருந்து குழந்தைகள் இடையில் நிற்பது மற்றும் குழந்தை தொழிலாளர், குழந்தை திருமணம் ஆகியவற்றை தடுக்க எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் மூலம் உண்டு உறைவிட பள்ளிகளை துவங்கியது.
தர்மபுரி மாவட்டத்தில் துவங்கப்பட்ட உண்டு, உறைவிட பள்ளிகளால், ஆண்டு தோறும் பள்ளியில் இருந்து இடையில் நிர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. மேலும் வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலை தேடி செல்லும் பாமர மக்கள் தங்களது குழந்தைகளை உண்டு உறைவிட பள்ளியில் சேர்த்து வந்தனர்.
தற்போது, தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரியை அடுத்த முத்துகவுண்டன் கொட்டாய், நல்லம்பள்ளி, பெரியாம்பட்டி, இண்டூர், தீர்த்தமலை, பாப்பாரப்பட்டி என மாவட்டத்தில், எட்டு உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார், 400 பேர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் இங்கு படிக்கும் மாணவர்களை, இன்றுடன் உண்டு உறைவிட பள்ளியில் இருந்து வெளியேறும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. முழு ஆண்டு தேர்வு முடியாத நிலையில், உண்டு உறைவிட பள்ளியில் இருந்து திடீர் என வெளியேற சொல்வதால், மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அனைவருக்கு கல்வித்திட்ட அலுவலர்களின் இந்த அதிரடியால், உண்டு உறைவிட பள்ளி மாணவர்கள் கல்வி தொடர்வதில் சிக்கல் எழுந்துள்ளது. அவர்களின் நலன் கருதி, முழு ஆண்டு தேர்வு முடியும் வரை, உண்டு உறைவிட பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து தங்க, நடவடிக்கை எடுக்க, பொது நல ஆர்வலர்கள் அனைவருக்கும் கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஆண்டுதோறும் மார்ச் இறுதியில், உண்டு உறைவிட பள்ளியில் இருந்து மாணவ, மாணவிகளை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பது வழக்கம். அதே போன்று தான், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் உள்ள, எட்டு பள்ளிகளில், தலா, 12 பேர் வரை தங்க வைக்கவும் நடைமுறை உள்ளது. மீண்டும், அடுத்த கல்வி ஆண்டில், உண்டு உறைவிட பள்ளி வழக்கம் போல் செயல்படும், என்றனர்.

Sunday 30 March 2014

புதிய ஓய்வு ஊதிய திட்ட குறைபாடுகள்

தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு உயிர் இழப்பு ஏற்பட்டால் ரூ.10 லட்சம் நிவாரண தொகை: தேர்தல் ஆணையம்

லோக்சபா தேர்தல் வாக்குபதிவின் போது ஏற்படும் அசம்பாவித சம்பவங்களில் அரசு ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் 9 கட்டமாக நடத்தப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு பணியில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓடிசா, சட்டிஸ்கர் ஆகிய மாநிலங்களில் நக்சல் தொல்லை உள்ளது. அங்கு தேர்தல் நடத்துவது பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. தமிழகத்திலும் இதற்கு சவால் விடும் வகையில் அரசியல் கட்சி தொண்டர்களின் வாக்கு பதிவு இயந்திரம் உடைப்பு, வாக்கு பதிவு இயந்திரத்தை தூக்கி செல்வது உள்ளிட்ட செயல்களில் திடீரென ஈடுபடுவது உண்டு. அந்த சமயங்களில் தடுக்க முயலும் அரசு ஊழியர்களை அவர்கள் தாக்குவதும் உண்டு. இந்த மாதிரி சம்பவங்களில் அரசு ஊழியர்கள் ஊனமானாலோ, இறந்தாலோ தேர்தல் கமிஷன் என்ன நிவாரணம் வழங்கியது என்று தெரியவில்லை. ஆனால் தற்போது அப்படி இறக்க நேரிட்டால் அவர்களுக்கு இரட்டை நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணைய செயலாளர் சுனித் முகர்ஜி அனுப்பியுள்ள சுற்றரிக்கையில், கூறியுள்ளதாவது: தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு எதிர்பாராதவிதமாக உயிர் இழப்பு ஏற்பட்டால் அவரது குடும்பத்தினருக்கு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் வழங்கப்படும். அதே நேரத்தில் தேர்தல் சமயத்தில் சமூக விரோதிகள், தீவிரவாதிகள் மூலம் குண்டு வெடிப்பு, ஆயுத தாக்குதல் போன்றவற்றால் ஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் உறுப்பு பாதிப்பு, பார்வை இழப்பு போன்றவை ஏற்பட்டால் ரூ.5 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடைத்தாள் திருத்தும் பணி
தமிழகம் முழுவதும் பிளஸ்–2 தேர்வுகள் முடிந்து விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி வேலூர் கிருஷ்ணசாமி மேல்நிலைப்பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் வணிகவியல் விடைத்தாள்களை தொழிற்பாட பிரிவுகளை நடத்தும் ஆசிரியர்களை வைத்து திருத்தும்படி மாவட்ட கல்வி நிர்வாகம் அறிவித்துள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் சங்கத் தலைவர் பாஸ்கரன் தலைமையில் 25–க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் திடீரென பள்ளியின் உள்ளே விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில் ‘வழக்கமாக வணிகவியல் விடைத்தாள்களை முதுநிலை ஆசிரியர்கள் தான் திருத்துவார்கள். ஆனால் முதல் முறையாக இந்த ஆண்டு தொழிற்பாட பரிவு ஆசிரியர்களை வைத்து விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. இது நடைமுறைக்கு உகந்ததல்ல. இதனால் மாணவர்கள் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. மேலும் அவர்களின் எதிர்காலம் பாதிக்க கூடிய வாய்பும் உள்ளது. எனவே வணிகவியல் ஆசிரியர்கள் தான் அந்த பாடத்திற்கான விடைத்தாள்களை திருத்த வேண்டும் ‘ என்றனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுப்பிரமணி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர்களிடம் ‘ தமிழக கல்வி இயக்குநர் கூறியபடி தான் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதே நடைமுறை தான் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இனிவரும் காலங்களிலும் இதே நடைமுறைகள் தான் பின்பற்ற உள்ளதாக தெரிகிறது. மேலும் இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்‘ என்றார். அதன்பின் விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் திரும்பினர்.
இச்சம்பவத்தால் பள்ளி வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் பணியில் 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள்: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

தமிழகத்தில் பிரச்னைக்குரிய வாக்குச்சாவடிகள் 9 ஆயிரத்து 222 இருப்பதாக இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. பொதுப் பார்வையாளர்கள் ஒவ்வொரு தொகுதிக்கும் சென்ற பிறகு பதற்றத்துக்குரிய மற்றும் பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகளின் முழு விவரங்கள் தெரிய வரும். வாக்குப் பதிவின் போது, 20,000 வாக்குச் சாவடிகளை வெப்-காமிரா மூலமும், 10,000 வாக்குச் சாவடிகளை காமிராக்கள் மூலமும் படம் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதற்காக, 35,000 கல்லூரி மாணவ-மாணவிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். வெப்-காமிரா மூலம் படம் பிடிப்பது, அவற்றை பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பம் தொடர்பான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள்

தேர்தல் தினத்தன்று பொது விடுமுறை தனியாருக்கும் பொருந்தும்: அரசு உத்தரவு

மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு தினத்தன்று (ஏப். 24) பொது விடுமுறை விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வெளியிட்டார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டப் பேரவைக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வசதியாக அன்றைய தினம் அரசு விடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
மத்திய அரசு சட்டப்படி சம்பளத்துடன் கூடிய இந்த விடுமுறை அறிவிக்கப்படுவதாக அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
தனியாருக்கும் பொருந்தும்: தமிழக அரசு அறிவித்துள்ள விடுமுறை அறிவிப்பு, தனியார் நிறுவனங்களும் பொருந்தும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது. தேர்தல் தினத்தன்று அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அளிக்க வேண்டும். இந்த விதியை பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது தொழிலாளர் நலத் துறை நடவடிக்கை எடுக்கும்.
என்ன நடவடிக்கை?: வாக்குப் பதிவு தினத்தன்று விடுமுறை விடாத தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு தொழிலாளர் நலத் துறை வசம் உள்ளது. விளக்கம் கோருவது மற்றும் அபராதம் விதிப்பது போன்ற சிறு அளவிலான தண்டனையே அவர்களுக்கு அளிக்கப்படுவதாக தொழிலாளர் நலத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த முறை வாக்குப் பதிவு, வேலை தினமான வியாழக்கிழமை வருவதால் விடுமுறை குறித்த அறிவிப்புகளை தனியார் நிறுவனங்கள் தனித்தனியாக வெளியிடும் என்றும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர் நேரில் வரத் தேவையில்லை

மாநில அரசுத் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறுபவர்கள் வரும் நிதியாண்டில் (2014-15) சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களை நேரிலோ, தபாலிலோ அல்லது பிறநபர் மூலமாகவோ அளிக்கலாம் என்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, தமிழ்நாடு மின்சார வாரியம், ரயில்வே, தபால், தொழிலாளர் சேமநல நிதி, உள்ளாட்சித் துறை மூலம் ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.
இது குறித்து, ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் அலுவலர் கே.டி.குணசேகரன் வெளியிட்ட அறிவிப்பு:
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் செயல்பட்டு வரும் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் உரிய சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்.
ஓய்வூதிய பணத்துக்கான உத்தரவு (டங்ய்ள்ண்ர்ய் டஹஹ்ம்ங்ய்ற் ஞழ்க்ங்ழ்-அசல் மற்றும் நகல்), வங்கி கணக்குப் புத்தகம், வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு-நகல்) ஆகியவற்றை ஓய்வூதிய அலுவலகத்துக்கு வரும் போது எடுத்து வர வேண்டும்.
மேலும், ஓய்வூதியத்தை கூட்டு கணக்கு (ஒர்ண்ய்ற் அஸ்ரீஸ்ரீர்ன்ய்ற்) மூலம் பெறுபவர்கள், தங்களது துணையுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவராக இருந்தால் அவரது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.
நேரில் வரத் தேவையில்லை: ஆவணங்களைச் சமர்ப்பிக்க நேரில் வர இயலாதவர்கள், வங்கிக் கிளை மேலாளர், மாநில- மத்திய அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி, வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரில் ஒருவரிடம் சான்று பெற்று ஓய்வூதியம் வழங்கும் அலுவலரின் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பிறநபர் மூலமாகவும் சேர்க்கலாம்.
அவ்வாறு அனுப்பும் போது, ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் வாழ்வுச் சான்றுடன் வங்கிக் கணக்கு எண், ஓய்வூதிய பணத்துக்கான உத்தரவு, பான்கார்டு (நகல்கள் மட்டும்) ஆகியனவும் முக்கியமாகும்.
வெளிநாட்டில் இருக்கும் ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் வாழ்வுச் சான்றினை அந்த நாட்டில் உள்ள நீதிபதி, நோட்டரி, வங்கிக் கிளை மேலாளர், இந்திய நாட்டுப் பிரதிநிதி ஆகியவற்றில் ஒருவருடைய கையெழுத்தினைப் பெற்று குறிப்பிட்ட ஆவணங்களின் நகல்களை அனுப்ப வேண்டும்.
ஆகஸ்ட்டில் நிறுத்தப்படும்: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் அளிக்க வேண்டிய வாழ்வுச் சான்று மற்றும் மறுமணம் புரியாத சான்று ஆகியவற்றின் படிவங்கள் ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய்ந்ஹழ்ன்ஸ்ர்ர்ப்ஹம் என்ற இணையதளத்தில் உள்ளன.
ஓய்வூதியதாரர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேரிலோ அல்லது தபால் உள்பட உரிய முறையிலோ சான்றுகளை அனுப்பத் தவறினால் ஓய்வூதியம் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நிறுத்தப்படும்.
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தின் முழு முகவரி: ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6

தனியார் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கல்வி கட்டணம் உயர்கிறது : வரும் கல்வியாண்டில் அமல்படுத்த திட்டம்


தனியார் மருத்துவக் கல்லூரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை உயர்த்த, நீதிபதி பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது. இதற்காக, கல்லூரி நிர்வாகங்களிடம் இருந்து, விண்ணப்பங்களை பெற்று வருகிறது.

நிர்ணயம் : தனியார் பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் ஆசிரியர் கல்வியியல் நிறுவனங்களில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்யும் பணியை, அரசால் நியமிக்கப்பட்ட, ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் தலைமையிலான குழு செய்து வருகிறது. இக்குழு, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, கல்விக் கட்டணத்தை நிர்ணயம் செய்கிறது. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளுக்கான பழைய கல்விக் கட்டணம், கடந்த ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, வரும் கல்வி ஆண்டுக்காக, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய, இக்குழு, முடிவு செய்துள்ளது. இதற்காக, தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து, கோரிக்கை விண்ணப்பங்களை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில், தனியார் எம்.பி.பி.எஸ்., கல்லூரிகள், 12ம்; பல் மருத்துவக் கல்லூரிகள், 18ம் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு, வரும், 2014 - 15ம் கல்வி ஆண்டு முதல், மூன்று ஆண்டுகளுக்கு, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.

வலியுறுத்தல் : எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கு, ஆண்டு கல்விக் கட்டணத்தை, 3.5 லட்சம் ரூபாயில் இருந்து, 6 லட்சம் ரூபாயாகவும், பி.டி.எஸ்., படிப்பிற்கான கல்விக் கட்டணத்தை, 1.5 லட்சம் ரூபாயில் இருந்து, 3 லட்சம் ரூபாயாகவும் உயர்த்த வேண்டும் என, பெரும்பாலான மருத்துவக் கல்வி நிறுவனங்கள், விண்ணப்பத்தில் வலியுறுத்தி உள்ளன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து, வரும் கல்வி ஆண்டு துவங்குவதற்குள், புதிய கல்விக் கட்டணத்தை, பாலசுப்ரமணியன் குழு அறிவிக்கும். பொறியியல் கல்லூரிகளை பொறுத்தவரை, ஏற்கனவே நிர்ணயம் செய்துள்ள கல்விக் கட்டணம், வரும் கல்வி ஆண்டு வரை பொருந்தும். 2015 - 16ம் கல்வி ஆண்டிற்கு, புதிய கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். தற்போதைய நிலவரப்படி, தேசிய தர நிர்ணய மதிப்பீட்டு குழுவின் (நாக்) அங்கீகாரம் பெற்ற பாடப் பிரிவுகளுக்கு, 45 ஆயிரம் ரூபாயும், அங்கீகாரம் பெறாத பாடப் பிரிவுகளுக்கு, 40 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு தேர்வு நடத்த உத்தரவு


தமிழகத்தில், ஒன்பது மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பலருக்கும், மொழியறிவு கூட இல்லாததால், பத்தாம் வகுப்பு 
பொதுத்தேர்வை எதிர்கொள்ள முடியாமல், இடையிலேயே நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தடுக்கும் வகையில், ஒன்பதாம் வகுப்பில் கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு தனி ஆசிரியர் நியமிக்கப்பட்டு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகின்றன. நடப்பு ஆண்டு, கடந்த நவம்பர் மாதத்தில், அனைத்து பள்ளிகளிலும், முன்னறித்தேர்வு நடத்தப்பட்டு, அதில், பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
சிறப்பு பயிற்சி முடிந்துள்ள மாணவர்களின் கற்றல் அடைவுகளை மீண்டும் மதிப்பிடுமாறு, அனைவருக்கும் இடைநிலைக்கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வுக்காக, ஒரே மாதிரியான வினாத்தாள் அச்சிடப்பட்டு, பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.மதிப்பெண் பட்டியலை மாவட்ட திட்ட அலுவலகத்துக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

துவக்க பள்ளியில் தட்டுத்தடுமாறும் ஆங்கிலவழி கல்வி : வரும் கல்வியாண்டிலும் முக்கியத்துவம் தர உத்தரவு

தமிழகத்தில், 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 14 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவ, மாணவியரும், 1.4 லட்சம் ஆசிரியர்களும் உள்ளனர். 
ஏராளமான இலவச பொருட்கள் வழங்கியும், புதிய கல்வி முறைகளை அமல்படுத்தியும், மாணவர் சரிவை தடுக்க முடியவில்லை. இந்நிலையில், தனியார் நர்சரி, பிரைமரி பள்ளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கவும், மாணவர் எண்ணிக்கை அங்கு பல மடங்கு பெருகுவதும் நடந்து வருகிறது.
தனியார் பள்ளி மோகம் ஆங்கிலவழிக்கல்வி என்பது மட்டுமின்றி, மாணவர்கள் மீதான அக்கறையும், அந்த பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்கக்கூடிய வாய்ப்பும் இருப்பதால், கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்தவர் கூட, தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கவே விரும்புகின்றனர்.
கடந்த ஆண்டு, ஆங்கிலவழிக்கல்வி என, அரசு பள்ளியில் தனிப்பிரிவு துவக்கினால், அதில் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ள மாணவர்களை, அங்கு கொண்டு வந்து பெற்றோர் சேர்க்கலாம் என, அரசும், கல்வித்துறை அலுவலர்களும் நினைத்திருந்தனர். ஆனால், அப்படியெதுவும் நடக்காததால், ஆங்கிலவழிக்கல்விக்கு மவுசு இருப்பதாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, அரசு பள்ளியில் ஏற்கனவே, தமிழ் வழிக்கல்வியில் சேர்ந்துள்ள மாணவர்களை, ஆங்கிலவழி கல்விக்கு மாற்றியது.
இதை அரசு பள்ளியில், ஒரு லட்சம் மாணவர்கள் ஆங்கிலவழிக்கல்வியில் புதிதாக சேர்ந்துள்ளனர் என, பெருமிதமாக அறிவித்தனர். ஆனால், தமிழ்வழி கல்வியில், ? லட்சம் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்த உண்மையை யாரும் கூற முன்வரவில்லை. பெயரளவில், ஆங்கிலவழி கல்வி என, அறிவித்ததுடன் சரி, அதற்கு பின், அவர்களுக்கான தனி வகுப்புகளோ, பயிற்சிகளோ, ஆசிரியர்களோ வழங்கப்படவில்லை.
தவறான கொள்கை தமிழ்வழிக்கல்வி, ஆங்கிலவழிக் கல்வி மாணவர்கள் அனைவரையும் ஒரே வகுப்பறையில், அமர வைத்து, அதே ஆசிரியர் மூலம் வழக்கம் போல், பாடம் நடத்தும் பணி நடந்து வந்தது. இதனால், அரசு பள்ளிகளின் தரம் குறித்தோ, ஆங்கிலவழிக்கல்வி குறித்தோ, பெற்றோரின் எண்ணத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இந்நிலையில், வரும் கல்வியாண்டில், ஆங்கிலவழிக்கல்வியில் மேலும் அதிக கவனம் செலுத்தி, மாணவர்களை ஆங்கிலவழிக் கல்வியில் கூடுதலாக சேர்க்க கல்வித்துறை அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டில் நடந்த அதே, புள்ளிவிவர, "மேஜிக்' மட்டும் பெருமிதமாக இருக்கலாமே தவிர, மொத்த மாணவர் எண்ணிக்கையில் சரிவு இருக்கத்தான் செய்யும் என்கின்றனர் ஆசிரியர்கள்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது: தனியார் பள்ளிகளில் சேர்க்க வழியில்லாத பெற்றோர் மட்டுமே, அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர். மற்றபடி, தனியார் பள்ளியில் சேர்த்தபின், அரசு பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வியில் கொண்டு வந்து சேர்க்க யாரும் தயாரில்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகளில், ஆசிரியர்களின் நடத்தையால், பெற்றோர் நம்பிக்கை இழந்துவிட்டனர்.
குறிப்பாக ஈராசிரியர் பள்ளிகளில், ஒரு ஆசிரியர் பெரும்பாலும், மருத்துவ விடுப்பில் இருப்பதும், மற்றொரு ஆசிரியர் பள்ளி நிர்வாகத்துக்கு, அலுவலகத்துக்கு அலைவதும் சரியாக இருக்கிறது. பெரும்பாலான நாளில் ஆசிரியர் இல்லாத நிலை, பல பள்ளிகளில் உள்ளது. ஆசிரியர் இல்லாத பள்ளிகளில் ஆங்கில வழி துவக்கினால் மட்டும் எவ்வித முன்னேற்றமும் வந்துவிட போவதில்லை. மாறாக, தற்போது அரசு பள்ளிகளில் மட்டும் இருந்து வரும், தமிழ்வழிக்கல்வி, இன்னும் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போய்விடவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்கூட்டியே எஸ்.எஸ்.எல்.சி., "ரிசல்ட்' ஜூன் 16ல் பிளஸ் 1 வகுப்பு துவக்கம்


எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு, துவங்கிய நிலையில், தேர்வு முடிவு, முன்கூட்டியே வெளியிடப்பட்டு, ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கும், மற்ற வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதியும், பள்ளிகள் திறந்து வகுப்பு எடுக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு, துவங்கி நடந்து வருகிறது. வரும் ஏப்ரல், 9ம் தேதி வரை நடக்கிறது. பிளஸ் 2 தேர்வை போலவே, எவ்வித முறைகேடுக்கும் இடம் தராமல் நடத்த, தேர்வுத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதேபோல், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் துரிதப்படுத்தி, தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட ஏற்பாடு நடக்கிறது. கடந்த, 2012 -- 13ம் கல்வி ஆண்டில், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, கடந்த, மே, 31ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூன், 24ம் தேதி முதல், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு எடுக்கப்பட்டது. ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 1 வகுப்பு, முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த, ஜூன் மாதம்வழக்கமாக, பிளஸ் 1 தவிர மற்ற வகுப்பு பள்ளிகள் திறக்க வேண்டி இருந்தும், கோடை வெப்பம் காரணமாக, துவக்க, உயர்நிலை, பிளஸ் 2 வகுப்புக்கு, கடந்த, ஜூன், 10ம் தேதி திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு, எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு பணிகளை விரைவாக முடித்து, முன்கூட்டியே தேர்வு முடிவு அறிவிக்கப்பட்டு, பிளஸ் 1 வகுப்பும், முன்கூட்டியே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் கூறியதாவது: எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு, லோக்சபா தேர்தல் முடிவு வெளியிட்ட பின் அறிவிக்கப்படும். கடந்த, ஜூன், 24ம் தேதி, பிளஸ் 1 வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டுக்கு, வரும், ஜூன், 16ம் தேதி, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடத்தி, வகுப்பு துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல், துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 ஆகிய வகுப்புகளுக்கு, ஜூன், 2ம் தேதி பள்ளிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி.,க்கு மட்டும், நடப்பு கல்வி ஆண்டில், எட்டு நாள் முன்னதாக, பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்பு நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Saturday 29 March 2014

15.04.2014 ம் தேதி வரை துறை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் -TNPSC அறிவிப்பு


Departmental Examinations May 2014 - Instructions
  1. Applications are invited from the candidates for admission to the Departmental Examinations May 2014 through "FULLY ONLINE" mode. Filled-up Online Application Forms will be electronically transmitted to the TNPSC Office and hence there is no need to send the application by post. However,those who are applying for the test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 MUST send the Online Application Form and the Identification Slip to TNPSC Office by post with relevant details of previous examinations, Work etc.
  2. Fully Online registration for Departmental Examinations May 2014 is available for candidates applying from all the 33 Centres, from 01/03/2014 to 15/04/2014.
  3. CANDIDATES WILL NOTE THAT REGISTRATION FEE OF Rs. 30/- WILL HAVE TO BE INCLUDED IN THE POSTAL RECEIPT APART FROM THE FEE FOR THE TESTS APPLIED FOR.
  4. Total Fees should be paid through postal receipt only except the candidates opting NEW DELHI as Centre.
  5. Examination / Registration Fees: Kindly make sure that you have the Postal Receipt for the requisite number of tests that you will be applying for, before registering online. (Calculate the Total Fee using Fee Calculator)
  6. Procedure to apply online :See : Instructions to the Candidates for applying through Online in Tamil | English
  7. Kindly send WITHOUT FAIL the online Application form & Identification Slips to TNPSC by post those who are applying for the test codes 001, 085,115,131,148,164 209,210,211,212,213,214 and 215 with relevant details of previous examinations, Work etc. before April of this year. Candidates applying for other than these tests need not send the application form to the Commission by post.
  8. Last date: This facility will be available till 5.45 P.M. on 15/04/2014
     
E-mail :  coetnpsc . tn @ nic . in    |  Call :   1800 425 1002
Online Regn. to be closed after 17 day(s)
Instructions
Application Form
Apply Online
Login to View Identification Slip
Login to Upload Identification Slip
Help
Instructions : Tamil | English (PDF)
Tests and Fees
Fee Calculator
Examination Centres
List of Post Offices
Notification : Tamil  | English (PDF)
Fee Structure (PDF)
Examination Time Table (PDF)
Get Adobe Reader
Feedback
Call : 1800 425 1002
E-mail : coetnpsc . tn @ nic . in

பள்ளிகளில் இப்படியும் பாகுபாடு ‘டல்’ மாணவர்கள், இனி தனித்தேர்வர்கள்! தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க... விபரீத ஐடியா


பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்டுவதற்காக, சுமாராகப் படிக்கும் மாணவர்களை, பொதுத்தேர்வு எழுத விடாமல், தனி தேர்வர்களாக தேர்வெழுத வைக்கும் நடவடிக்கையில் சில பள்ளிகள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 7 ஆயிரத்து 281 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 3ல் தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது. இத்தேர்வை 8.26 லட்சம் பள்ளி மாணவர்களும், 53 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது நடந்து வருகிறது. ஏப். 9ம் தேதி வரை நடக்கிறது. இத்தேர்வை 10 லட்சத்து 39 ஆயிரம் பள்ளி மாணவர்களும், 75 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
சரியாக படிக்காத மாணவர்களை பொதுத்தேர்விற்கு சில மாதங்களுக்கு முன் பள்ளிகளில் இருந்து நீக்குவது அல்லது பள்ளியில் படித்தாலும் தேர்வெழுத அனுமதிக்காமல் பொதுத்தேர்வு முடிந்தவுடன் வரும் உடனடித்தேர்வில் எழுதலாம் என பெற்றோரிடம் எழுதி வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சில பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன. இப்படிச் செய்வதால், பொதுத்தேர்வின் போது பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
உடனடி தேர்வின் போது, அதில் பங்கேற்கும் மாணவர்கள் தனி தேர்வர்களாகவே கணக்கிடப்படுவர். பொதுத்தேர்வின் போது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமாராக படிக்கும் மாணவர்களை தனி தேர்வர்களாக தேர்வு எழுத வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. ‘டல்’ மாணவர்களை ஓரம் கட்டும் செயல் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி மற்றும் சிவகங்கை பகுதிகளில் இம்முறை இந்தச் சம்பவங்கள் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூறுகையில், ‘பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்ப்பதில்லை. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கின்றனர். படிப்பில் எவ்வளவு சுமாராக இருந்தாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் அந்த மாணவர்களை கண்டிப்பாக சேர்த்தாக வேண்டும். அதே நேரம் தேர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்கவேண் டும் என கல்வித்துறை அழுத்தம் கொடுக்கிறது. ஆசிரியர்களால் முன்புபோல் மாணவர்களை கண்டித்து படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதால் இதுபோல் சம்பவங்கள் நடக்க தொடங்கியுள்ளன. மதிப்பெண் கணக்கீடு, தேர்ச்சி விகிதம் என தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுவதே இதற்கு காரணம் என்றனர்.

டிஸ்லெக்சியா நோயால் பாதிப்பு: 50 மாணவர்களுக்கு தேர்வெழுத கூடுதலாக ஒரு மணி நேரம்


தர்மபுரி மாவட்டத்தில் மறதி நோயால்(டிஸ்லெக்சியா) பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் 50 பேருக்கு, தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் கல்வித்துறை வழங்கியுள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி பொது தேர்வு நடைபெற்று வருகிறது. தர்மபுரி மாவட்டத்தில் 69 மையங்களில் 27,606 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 6 இடங்களில் 10 வினாத்தாள்கள் கட்டுக்காப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களாக 20 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக 26 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதே போல, டிஸ்லெக்சியா மாணவர்கள் 50 பேருக்கு தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலெக்டர் விவேகானந்தன் கூறுகையில், தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் டிஸ்லெக்சியா என்ற மறதி நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் தேர்வு எழுத கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது, என்றார்.
தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் இந்த நோய் பாதிப்பு பற்றி கேட்டபோது, ‘மரபணு குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி மறதி ஏற்படும். ஒரே மாதிரியாக இருக்கமாட்டார்கள். 
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அனைத்து குழந்தைகளை போலவே புத்திசாலி குழந்தைகளாக இருப்பார்கள். ஆனால் எழுத படிக்க, சிரமப்படுவார்கள்‘ என்றனர்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை: கூடுதல் கவனம் செலுத்த திணறும் ஆசிரியர்கள்


பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணியில் புதிய முறை பின்பற்றுவதால் ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 24ம் தேதி முதல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தாண்டு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் பல புதிய முறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் அறிவியல் மற்றும் கணிதம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு மட்டுமே ‘டம்மி’ எண் பயன்படுத்தப்படும். 
தற்பொழுது மாணவர்கள் எழுதும் விடைத்தாளில் பார்கோடிங் இடப்பட்டு மாணவர்களின் எண் அடங்கிய முகப்புத் தாள் இணைக்கப்பட்டு இருந்தது. விடைத்தாள் திருத்தும் இடத்தில் இந்த முகப்புத் தாள் கிழிக்கப்பட்டு விடைத்தாளில் திருத்தும் ஆசிரியரே அதற்கான ‘டம்மி’ எண் போட்டு திருத்த வேண் டிய நிலையில் உள்ளனர்.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் ஆசிரியர் ஒரு விடைத்தாளை கையில் எடுத்து ‘டம்மி’ எண் போடுவதில் துவங்கி திருத்தி மொத்த மதிப்பெண் போடும் வரை அனைத்து விஷயத்திலும் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதில் ஆசிரியர் கவனமின்றி செயல்பட்டால் குறிப்பிட்ட விடைத்தாள் யாருடையது என்று கண்டுபிடிப்பதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. 
விடைத்தாள் திருத்தும் பணிகள் ஈடுபட்டுள்ள ஒரு சில ஆசிரியர்கள் மத்தியில் திணறல் காணப்பட்டது. ஆசிரியர்கள் கூடுதல் கவனத்துடன் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கல்வி அதிகாரிகள் கூறினர்.

5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் அறிய சிறப்பு தேர்வு


5ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அறிய தமிழகத்தில் 15 மாவட்டங்களில் சிறப்புத்தேர்வு நடத்தப்படுகிறது. 
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிலையம் சார்பில் தமிழகத்தில் பள்ளிகளில் கட்டமைப்பை மேம்படுத்தவும், பாட திட்டங்களை வடிவமைக்கவும் முன்னேற்பாடாக 5ம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய அளவில் அறிவுத்திறன் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்தேர்வில் 5ம் வகுப்பு மாணவர்கள் கற்றதன்மூலம் அடைந்த திறன்குறித்து தமிழ், கணிதம், சூழ்நிலையியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். 
ஒரு மாணவர் 2 பாடத்தில் தேர்வு எழுத வேண்டும். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் விவரங்களை அதற்கென வழங்கப்பட்ட படிவங்களில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். தமிழகத்தில் நெல்லை, சென்னை, கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, நாமக்கல், சேலம், விழுப்புரம், தர்மபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய 15 மாவட்டங்களில் 275 பள்ளிகளில் வரும் ஏப்ரல் 10, 11, மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் இந்த அறிவுத்திறன் தேர்வு நடைபெறுகிறது. 
மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் இத்தேர்வை நடத்த உள்ளது. ஏற்பாடுகளை மாவட்ட கல்வி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

வீட்டிலேயே கொண்டு வந்து கொடுப்போம் ஓய்வூதியத்தை : எஸ்பிஐ புதிய திட்டம்

75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்களுக்கு, அவர்களது மாதாந்திர ஓய்வூதியத்தை, அவர்களது வீட்டுக்கே கொண்டு சென்று அளிக்கும் திட்டத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தை முதல் முறையாக கொல்கத்தாவில் எஸ்பிஐ வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து செயல்படுத்திட முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு ஏற்புடையதாக இருக்கும் பட்சத்தில், நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளும் இந்த திட்டத்தை நடைமுறைபடுத்த முயலலாம் என்று கூறப்படுகிறது.
75 வயதுக்கு மேல் ஆகும் ஓய்வூதியதாரர்கள், தங்களது முதுமை காரணமாக வங்கிகளுக்கு மாதந்தோறும் வந்து தங்களது ஓய்வூதியத்தை பெறுவதில் கடும் சிரமங்கள் உள்ளன. அவற்றை களையவே இந்த திட்டத்தை எஸ்பியை கொண்டு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இதனால், நாட்டில் ஏராளமான ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.

நீங்கள் வாக்குசாவடி தலைமை அலுவலரா? இந்த வீடியோவை பாருங்க! பயன் உள்ளதாக இருக்கும்!! Presiding Officers Training Video for EVM operations

ஏப்ரல் 10 முதல் 19 வரை பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு

பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 10-ஆம் தேதி தொடங்கி 19 வரை நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறுவதால், அதற்கு முன்னதாகவே விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளை முடிக்க அலுவலர்களுக்கு அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும் 70-க்கும் அதிகமான மையங்கள் அமைக்கப்பட உள்ளன. விடைத்தாள் திருத்தும் பணியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
மொத்தம் 80 லட்சத்துக்கும் அதிகமான விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படவுள்ளன.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீட்டு முகாம் அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களை அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பத்தாம் வகுப்புத் தேர்வுகள் மார்ச் 26-ஆம் தேதி தொடங்கின. இந்தத் தேர்வை தமிழகம் முழுவதும் பள்ளிகளின் மூலமாக 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களும் தனித்தேர்வர்களாக 74 ஆயிரம் மாணவர்களும் எழுதி வருகின்றனர். மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் பயிற்சி காரணமாக ஏப்ரல் இறுதியில் விடைத்தாள் மதிப்பீடு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், விடைத்தாள் மதிப்பீட்டை முன்கூட்டியே நடத்தி முடிக்க அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது. பத்தாம் வகுப்புத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 2 தேர்வில் மொழிப்பாட விடைத்தாள்கள் இப்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன. முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீடு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளன.
6 முதல் 9 ஆம் வகுப்பு வரை தேர்வுகள்:
மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவையடுத்து இந்த ஆண்டு 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை, ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்குகின்றன இந்த வகுப்புகளுக்கான தேர்வுகளை ஏப்ரல் 16-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்வுக்கான வினாத்தாள்கள் மாவட்ட அளவில் அச்சிடப்பட்டு தயாராக உள்ளதாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஆண்டு மொத்தமாக வினாத்தாள்களை எடுத்து வருவதற்குப் பதிலாக ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வினாத்தாள் காப்பு மையங்களிலிருந்து வினாத்தாள்கள் எடுத்துவரப்பட உள்ளன.

அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் வகுப்பு நேரம் குறைக்கப்படுமா?

"வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும்,' என, ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த ஒரு மாதமாக, பகல் முழுவதும் கடுமையான வெயில் காணப்படுகிறது; இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக உள்ளது. அக்னி நட்சத்திரம் இன்னும் துவங்காத நிலையிலும், வெயிலின் கொடுமை வாட்டி வதைப்பதால், பொதுமக்கள் திணறுகின்றனர். அம்மை, வெக்கை நோய் போன்ற பாதிப்பு ஏற்படுகிறது. மாணவர்களின் உடல் நலன் கருதி, அரசு துவக்கப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்படும் நேரத்தை குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது. வெயிலின் தாக்கத்தால், வகுப்பறைகளில் வெப்பம் தகிக்கிறது. பல பள்ளிகளில், மின்விசிறி வசதி இல்லை; மின்விசிறி இருந்தாலும், மின்சாரம் அடிக்கடி தடைபடுகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, முன்னதாகவே கோடை விடுமுறை விடப்படும் நிலையில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு மே மாதம் மட்டுமே விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆண்டுக்கு 220 நாட்கள், பணி நாட்களாக இருப்பதால், ஏப்., 30 வரை துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆசிரியர்கள் கூறுகையில், "அடுத்த மாதம் 30 வரை, துவக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள் செயல்பட வேண்டும். வெயிலின் தாக்கத்தால், ஆறு முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் அவதிப்படுகின்றனர். அவர்களது உடல் நலன் கருதி, காலை 8.30 முதல் மதியம் 1.00 மணி வரை என வகுப்பு நேரத்தை குறைக்க வேண்டும். அடுத்த கல்வியாண்டில் இருந்து, முப்பருவ தேர்வை முன்னதாக திட்டமிட்டு, மார்ச் மாதமே நடத்தி, ஏப்., மே மாதங்களில் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்,' என்றனர்.

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது.
தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகளை நேரிடையாகச் சென்று கணக்கெடுத்து அவர்களை பள்ளிக்கு அனுப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, இந்தாண்டுக்கான கணக்கெடுப்பு பணி, வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல், 17ம் தேதி வரை, 11 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு விவரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள, நகராட்சி, பஞ்சாயத்து, பேரூராட்சிக்கு உட்பட்ட 2,883 குடியிருப்பு பகுதிகளில் கணக்கெடுப்பு நடக்கிறது.
மேலும், செங்கல் சூளை, கட்டப் பணி, சாலைப் பணி, உணவு விடுதி மற்றும் இதரப் பணிகள் நடக்கும் இடங்களில் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது. இப்பணியில் மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் என 220 பேரும், சிறப்பாசிரியர்கள் 75 பேரும் ஈடுபடுகின்றனர். பள்ளிச் செல்லா, பள்ளியை விட்டு இடை நின்ற மாணவ, மாணவிகள் விவரங்கள் கண்டறிந்தால் தகவல் தெரிவிக்குமாறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, சுகாதாரத் துறை, கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கணக்கெடுப்பில் கண்டறியப்படும் 6 வயது முதல், 14 வரையுள்ள மாணவ, மாணவிகளுக்கு அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கப்பட்டு தனிக்கவனம் செலுத்தி, கல்வி கற்பிக்கப்படும். குறுகிய காலத்தில் பள்ளியை விட்டு இடைநின்ற 6, 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு குறுகிய கால இணைப்பு மையம் மூலமும், மூன்று மாதங்களுக்கு மேல் பள்ளியை விட்டு இடை நின்றவர்களுக்கு நீண்ட கால இணைப்பு மையம் மூலமும் கல்வி கற்பிக்கப்படும்.
புலம் பெயர்ந்த, தெருவோரக் குழந்தைகள், நாடோடிக் குழந்தைகள், நரிக்குறவர் இன குழந்தைகள் ஆகியோருக்கு உண்டு உறைவிட மையம் மூலமும் கல்வி கற்பிக்கப்படும். கண்டறியப்படும் மாணவர்கள் தொடர்ந்து சிறப்பு பயிற்சி பெறுகிறார்களா என்பது குறித்து கண்காணிக்கப்படும் என, கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலப்பு

திருப்பூர் அருகே, அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் விஷம் கலந்த மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.திருப்பூர் மாவட்டம், மூலனுார் அருகே, சின்னகாம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.காலை, பள்ளி துவங்கும் முன், தலைமையாசிரியர் குடிநீர் தொட்டி அருகில் சென்றுள்ளார்.அங்கு, துர்நாற்றம் வீசியுள்ளது. சந்தேகமடைந்த அவர், குடிநீர் தொட்டியில் பார்த்தபோது, அதில், விஷம் கலந்திருந்தது தெரிய வந்தது.பள்ளி துவங்கும் முன், விஷம் கலந்தது தெரிய வந்ததால் குடிநீரை மாணவர்கள் யாரும் பருகவில்லை. இதனால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.பள்ளி வளாகத்தில் கூடிய பெற்றோர்கள், போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததால், சமூக விரோதிகள் விஷம் கலந்துள்ளனர் என, அதிகாரிகளிடம் வாதிட்டனர்.மேலும், பள்ளிக்கு பாதுகாப்பு வசதி ஏற்படுத்திதர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து பெற்றோர்கள் கலைந்து சென்றனர்.புகாரையடுத்து, போலீசார் வழக்குப்பதிந்து, விஷம் கலந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

வருவாய்த்துறையினர் மெத்தனம்: கல்வித்துறையில் 165 பேருக்கு "மெமோ'

வருவாய்த்துறையினர் மெத்தனம் காரணமாக, கல்வித்துறையினர் 165 பேருக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தஞ்சை லோக்சபாவுக்கு உள்பட்ட தஞ்சை சட்டசபை தொகுதியில், அமைக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்களில், கல்வித்துறையிலுள்ள ஆசிரியர், ஆசிரியைகள், அலுவலர்கள், தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்குச்சாவடி நிலை 1 ஆகிய பணிகளில் அமர்த்தப்படுவர். இதற்காக, முன்கூட்டியே வருவாய்த் துறையிலுள்ள ஆர்.ஐ.,- வி.ஏ.ஓ., மூலம் தேர்தல் பணி ஆணை அந்தந்த பள்ளிகளிலுள்ள ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நேரடியாக வழங்கப்பட்டு, அக்னாலேஜ்மென்ட் கையெழுத்து பெறப்படும். ஆனால், தஞ்சை மாவட்ட கல்வித்துறைக்குட்பட்ட தஞ்சை நகரம், ஊரகம், திருவையாறு, பூதலூர் ஆகிய ஒன்றியங்களிலுள்ள ,165 ஆசிரியர், ஆசிரியை மற்றும் அலுவலர்களுக்கு பணி ஆணையை, அந்தந்த பகுதி வருவாய்த்துறையினர் வழங்கவில்லை. தஞ்சை நகரத்தில், 13 பேருக்கு ஏ.இ.ஓ.,விடம் பணி ஆணை ஒப்படைக்கப்பட்டு, உரியவர்களுக்கு சேர்க்கப்பட்டுள்ளது. பணி ஆணை கிடைத்தவர்கள் மட்டும், தஞ்சை சரபோஜி கல்லூரியில் இம்மாதம், 8ம் தேதி பயிற்சி வகுப்பில் பங்கேற்றனர். பணி ஆணை கிடைக்காததால், 165 பேர் பங்கேற்கவில்லை. இதற்கு வருவாய்த்துறையினர் மெத்தனப்போக்கு, அலட்சியமே காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, 165 பேருக்கும், மார்ச், 20ம் தேதியிட்டு, "தஞ்சை லோக்சபாவுக்கு உள்பட்ட தேர்தல் பணிக்காக, 8ம் தேதி பயிற்சி வகுப்பில் பங்கேற்கவில்லை. இது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம். எதிர்வரும் நாளில் பங்கேற்க வேண்டும். தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்' என, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முறைப்படி, தேர்தல் பணி ஆணையை வழங்குவதில், வருவாய்த் துறையினரின் மெத்தனத்தால், மெமோ பெற்றுள்ள கல்வித்துறையினர் மன உளைச்சலில், புலம்பி தவிக்கின்றனர்.

துறை தேர்வுகள் கடைசி தேதி நீடிப்பு

2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வாணையத்தால் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட மாட்டாது.

அறிவிக்கை நாள் : 01.03.2014

விண்ணபிக்க கடைசி தேதி : 15.04.2014 5,45 பி.ப.

தேர்வு தேதிகள்: 24.05.2014 முதல் 31.05.2014 வரை.

விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி: ஆசிரியர்கள் அதிருப்தி


அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி நடத்தப்படுவதற்கு ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
மக்களவைத் தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 7,215 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவு பணிகளில் அவர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதையொட்டி, வாக்குப்பதிவு பணிகள் தொடர்பாக அவர்களுக்கு 4 கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
முதல்கட்ட பயிற்சி வகுப்புகள் மார்ச் 31-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாமக்கல், பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம், சேந்தமங்கலம், மாணிக்கம்பாளையம், குமாரபாளையம் என மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், மார்ச் 31-ஆம் தேதி அரசு விடுமுறை நாள் (தெலுங்கு புத்தாண்டு) என்பதால், அன்றைய தினம் தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஆசிரியர் தரப்பில் கடும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டத் தலைவர் செ.மலர்கண்ணன் கூறியது:
ஒவ்வொரு ஆண்டும் பணியாளர்களுக்கு கட்டாயமாக விடுமுறை அளிக்க வேண்டிய நாள்கள் குறித்து அரசே வகுத்தளித்துள்ளது. இதில், தெலுங்கு புத்தாண்டும் ஒன்றாகும். இதைக் கருத்தில் கொண்டே தேர்தல் ஆணையமே வேட்புமனு தாக்கலை திங்கள்கிழமை நடத்தாமல் விடுமுறை அளித்துள்ளது.
ஆனால், அரசு விடுமுறை நாளை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளே கண்டுகொள்ளாமல் அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்துவது வருத்தத்துக்குரியது. எனவே, அரசு விடுமுறை நாளில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்துவதைக் கைவிட்டு வேறொரு நாளில் நடத்த ஆசிரியர்கள் எதிர்நோக்கி உள்ளனர் என்றார் அவர்.
இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.தட்சிணாமூர்த்தி கூறியது:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனால், மற்ற நாள்களில் தேர்தல் பயிற்சி வகுப்பு நடத்தினால் தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களால் பயிற்சிக்கு வர முடியாது. தவிர, அந்த ஆசிரியர்களுக்கு தனியாக பயிற்சி அளிப்பதும் இயலாது. மேலும், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் பயிற்சி என்பதால் காலம் தாழ்த்தாமல் நடத்த வேண்டியதும் அவசியமாகும். இவற்றைக் கருத்தில் கொண்டுதான் மார்ச் 31-ஆம் தேதி பயிற்சி வகுப்பை நடத்த திட்டமிடப்பட்டது. ஆசிரியர்களும் தாங்கள் ஈடுபடும் பணியின் முக்கியத்துவம் கருதி தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்றார் அவர்.

Friday 28 March 2014

பள்ளிகளுக்கு ஏப். 23 முதல் கோடை விடுமுறை: ஜூன் 2-ல் மீண்டும் திறப்பு

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வருடாந்திர தேர்வுகள் ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைகின்றன.

ஏப்ரல் 17, 18 ஆகிய இரு நாட்கள் (பெரிய வியாழன், புனித வெள்ளி) விடுமுறை ஆகும். அதன்பிறகு சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின்னர் ஏப்ரல் 21, 22-ம் தேதிகளில் பள்ளிகள் இயங்கும்.

ஏப்ரல் 23-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரன் முருகன் தெரிவித்தார்.

தனித்தேர்வுக்கு தள்ளப்படும் பள்ளி மாணவர்கள்

பள்ளியில் படிக்கும் மாணவர்களை தேர்ச்சி விகிதத்திற்காக தனி தேர்வர்களாக தேர்வெழுத வைக்கும் நடவடிக்கையில் சில ஆசிரியர்கள் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் 5,000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள், 7,281 அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு மார்ச் 3ல் தொடங்கி 25ம் தேதி முடிவடைந்தது.
இத்தேர்வை 8.26 லட்சம் பள்ளி மாணவர்களும், 53 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதினர். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. ஏப்.9ம் தேதி வரை நடக்கிறது. இத் தேர்வை 10 லட்சத்து 39 ஆயிரம் பள்ளி மாணவர்களும், 75 ஆயிரம் தனித்தேர்வர்களும் எழுதுகின்றனர்.
அரசு தேர்விற்கு சில மாதங்களுக்கு முன் பள்ளிகளில் இருந்து சரியாக படிக்காத மாணவர்களை நீக்குவது, அல்லது பள்ளியில் படித்தாலும் தேர்வெழுத அனுமதிக்காமல் பொதுத்தேர்வு முடிந்தவுடன் வரும் உடனடித்தேர்வில் எழுதலாம் என பெற்றோரிடம் எழுதி வாங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் சில பள்ளி நிர்வாகங்கள் ஈடுபடுகின்றன. பொதுத்தேர்வின் போது பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பெரிய அளவில் பேசப்படுகிறது.
உடனடி தேர்வின் போது, அதில் பங்கேற்கும் மாணவர்கள் தனி தேர்வர்களாகவே கணக்கிடப்படுவர். பொதுத்தேர்வின் போது பள்ளியில் படிக்கும் மாணவர்களில் சுமாராக படிக்கும் மாணவர்களை தனி தேர்வர்களாக தேர்வு எழுத வைக்கும் சம்பவங்களும் நடந்து வருகிறது. 
இதுகுறித்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் தலைமையாசிரியர் சிலர் கூறுகையில், `பிளஸ்2 மற்றும் பத்தாம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை தனியார் பள்ளிகள் சேர்ப்பதில்லை. அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவர்களை மட்டுமே சேர்க்கின்றனர். 
படிப்பில் எவ்வளவு சுமாராக இருந்தாலும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் அந்த மாணவர்களை கண்டிப்பாக சேர்த்தாக வேண்டும். அதே நேரம் தேர்ச்சி விகிதமும் அதிகமாக இருக்க வேண்டும் என கல்வித்துறை அழுத்தம் கொடுக்கிறது.

ஆசிரியர்களால் முன்புபோல் மாணவர்களை கண்டித்து படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் கல்வித்துறை அழுத்தம் கொடுப்பதால் இதுபோல் சம்பவங்கள் நடக்க தொடங்கியுள்ளன. மதிப்பெண் கணக்கீடு, தேர்ச்சி விகிதம் என தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுவதே இதற்கு காரணம் என்றனர்.

தமிழ் முதல்தாள் தேர்வில் எழுத்துப்பிழை: மாணவர்கள் குழப்பம்

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் முதல் தாள் தேர்வு புதன்கிழமை நடந்தது. வினாத்தாளில் 49-இ கேள்வியில், “மீள் நோக்கும்' எனத் தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் கேட்கப்பட்டிருந்தது. இதில், மீள்நோக்கும் என்பதற்குப் பதில், ‘மீன் நோக்கும்' என்று தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது. இதனால் பல மாணவ, மாணவிகள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து தமிழாசிரியர் ஒருவர் கூறுகையில், “தமிழ் பாடத்தில் ஒரு எழுத்து மாறினாலும், அதன் பொருள் மாறிவிடும். மீள் நோக்கும் என்பதற்கு பதில், மீன் நோக்கும் என கேள்வி கேட்கப்பட்டுள்ளதால் அதன் அர்த்தமும், பொருளும் மாறிவிட்டது. பாடல் வரி மீள் நோக்கும் என தொடங்கும் என, மாணவர்களுக்கு தெரிந்திருந்தும், வினாத்தாளில் மீன் என அச்சிடப்பட்டதால், அதை வைத்து சிலர் முழு பாடலையும், மீன் நோக்கும் என மாற்றி எழுதி வைத்திருக்கக்கூடும். எனவே, இந்த கேள்விக்கு மாணவர்கள் மாற்றி எழுதியிருந்தாலும், உரிய மதிப்பெண் வழங்க வேண்டும்” என்றார்.

வாக்குசாவடி அலுவலர்கள் தேர்வு எப்படி?


வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களை எந்த தகுதி அடிப்படையில் தேர்வு செய்வது என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
ஒரு வாக்குசாவடியில் முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர் 1, வாக்குசாவடி அலுவலர் 2, வாக்குசாவடி அலுவலர் 3 ஆகிய 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இதில், வாக்குசாவடி முதன்மை அலுவலர், வாக்குசாவடி அலுவலர்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளன. அதன்படி வாக்குசாவடி முதன்மை அலுவலராக பணியாற்றுபவர் கண்காணிப்பாளர் நிலை மற்றும் அதற்கு மேல் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.4600க்கு மேல் பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். வாக்குசாவடி அலுவலர் 1 ஆக நியமிக்கப்படுபவர்கள் தேர்வு நிலை உதவியாளர் அல்லது உதவியாளர் நிலை அலுவலராக இருக்க வேண்டும். தர ஊதியம் ரூ.2800 முதல் ரூ.4800 வரை பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும். வாக்குசாவடி அலுவலர் 2 ஆக நியமிக்கப்படுபவர்கள், இளநிலை உதவியாளர், தட்டச்சர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 பெறுபவர்கள் மட்டும் இப்பதவிக்கு நியமிக்க வேண்டும். வாக்குசாவடி அலுவலர் 3 ஆக நியமிக்கப்படுபவர்கள் இளநிலை உதவியாளர், உதவியாளர் நிலை அலுவலர்கள் தர ஊதியம் ரூ.1800 முதல் ரூ.2800 வரை பெறுபவர்கள் மட்டும் நியமிக்கப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

10ம் வகுப்பு தேர்வெழுத பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அனுமதி

தேனியில், ஆண்டிப்பட்டி அருகே முத்தனம்பட்டி அரசு பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத ஹால் டிக்கெட் மறுக்கப்பட்ட 10 மாணவர்களும், இனி நடைபெறும் தேர்வுகளை எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையை ஏற்று, தேர்வுத் துறை இயக்குநரகம், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கியுள்ளது.
இனி நடைபெறும்தேர்வுகளில் தேர்வெழுதவும், நடந்து முடிந்த தேர்வுகளை சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் எழுதவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
100 சதவீத தேர்ச்சி காட்ட படிப்பில் பின்தங்கிய 10 மாணவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் ஹால்டிக்கெ வழங்காததால், அவர்களால் நடந்து முடிந்த தமிழ் முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளை எழுத முடியாமல் போனது. இது குறித்து செய்திகள் வெளியானதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொண்டு, மாணவர்கள் தேர்வெழுத அனுமதி பெற்றுள்ளார்.