பிளஸ் 2 தேர்வுத்தாள்களை பிரதி பெற்று மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு, கலந்தாய்வு விண்ணப்பித்த பின்னரே வாய்ப்பு கிடைப்பதால், பயனற்ற நிலை இருப்பதாக மாணவர்கள் கவலை தெரிவித்தனர். இப் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 9-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில், மதிப்பெண்களில் திருப்தியில்லாத மாணவ, மாணவியர் விடைத்தாள்கள் நகல்களைப் பெறவும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் பள்ளித் தேர்வுகள் துறை வாய்ப்புக் கொடுத்துள்ளது.
விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியும். இதற்காக, தேர்வுகள் துறை ஆலோசனைப்படி அந்தந்தப் பள்ளிகளில் ஏராளமான மாணவ, மாணவியர் விடைத்தாள்களின் நகல்களைப் பெறவும், மறுகூட்டலுக்கும் விண்ணப்பிக்க மனுச் செய்து வருகின்றனர்.
விடைத்தாள் நகல்களுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு, ஒரு வாரத்துக்குப் பின்னரே, இணையதளத்தில் விடைத்தாள் வெளியிடப்படும் எனவும், அதில் நகல் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைப்பெற்று மறுகூட்டலுக்கு 4 நாள்களுக்குள் விண்ணப்பிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, விடைத்தாள்கள் நகல்களைப் பெற்று, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்குள் காலதாமதம் ஏற்படுவதாக, மாணவ, மாணவியர் கவலை தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து அவர்கள் கூறுகையில், விடைத்தாள்களின் நகல்களைப் பெறுவதற்கு மே 14-ஆம் தேதி வரை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை அந்தந்தப் பள்ளியில் பெற்று சேகரித்து வைத்துள்ளனர்.
மே 14-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு விடைத்தாள்கள் நகல்கள் பெறுவதற்கு, பரிந்துரை செய்யப்பட்டு, ஒரு வாரம் கழித்து அந்த நகல்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். அதைப்பெற்று, மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கு சில நாள்கள் பிடிக்கும்.
ஆனால், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கலந்தாய்வு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 20-ஆம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 21-ஆம் தேதி முதல் மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படவுள்ளன. ஏற்கெனவே இணையதளத்தில் வெளியிடப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகல்களை அண்ணாப் பல்கலைக்கழக கலந்தாய்வு மனுவில் இணைத்து அனுப்ப வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே கலந்தாய்வு ரேண்டம் எண் வழங்கப்பட்டு, கலந்தாய்வு தேதியும் முடிவு செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால், மறுகூட்டலில் கூடுதல் மதிப்பெண் கிடைத்தாலும், பயனில்லாத சூழல் இருப்பது பெரும் கவலையளிக்கிறது. இதற்கு அண்ணா பல்கலை. துரித ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment