Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Monday 18 August 2014

மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு! கல்வித்துறை நடைமுறையை பின்பற்ற வலியுறுத்தல்


மதுரை மாநகராட்சியில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நடுநிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

மாநகராட்சியின்கீழ் 15 மேல்நிலை, 10 உயர்நிலை, துவக்கம் மற்றும் நடுநிலை என 67 பள்ளிகள் உள்ளன. 950க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர். கல்வி வளர்ச்சியை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிக் கல்வித் துறையில் 100 உயர்நிலை மேல்நிலையாகவும், 50 நடுநிலை உயர்நிலை பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால், புதிய ஆசிரியர் பணியிடங்கள் உருவாக வாய்ப்பு ஏற்படும். மாணவர்களும் அந்த பள்ளியிலேயே தொடர்ந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும். தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை உட்பட பல்வேறு கட்டமைப்பு வசதிகள் கிடைக்கும்.

அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் இதே நடைமுறை உள்ளது. ஆனால், மதுரையில் 2012ம் ஆண்டிலிருந்து பள்ளிகள் தரம் உயர்த்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பசுமலை, கிருஷ்ணாபுரம், சாத்தமங்கலம் உள்ளிட்ட பல்வேறு நடுநிலை பள்ளிகளில், 200க்கும் மேல் மாணவர்கள் எண்ணிக்கை இருந்தும், உயர்நிலை கல்வியை தனியார் அல்லது அரசு, உதவி பெறும் பள்ளிகளில் எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இது, மாணவர்கள், பெற்றோருக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்துகிறது. எனவே, கல்வித் துறை போல் ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட பள்ளிகளை மாநகராட்சியும் தரம் உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மாநகராட்சி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன் கூறுகையில், "பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டால் தான் கல்வி கட்டமைப்புக்கு ஒழுங்கான வடிவம் கிடைக்கும். கல்வித் துறை போன்று பள்ளிகளை தரம் உயர்த்துவதை மாநகராட்சியும் பின்பற்ற வேண்டும். மேலும், மேல்நிலை பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் இருப்பதால், மொழிப் பாடங்களுக்கு மட்டும் கூடுதலாக ஓர் ஆசிரியர் பணியிடம் உருவாக்க வேண்டும்," என்றார்.

கனவாகும் 'நல்லாசிரியர்' : மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவதில் மாநகராட்சி ஆசிரியர்கள் கண்டுகொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. 2010க்கு பின் ஒருவர் கூட மாநகராட்சி ஆசிரியர் தேர்வு செய்யப்படவில்லை.''அரசு பள்ளிகளுக்கு இணையாக மாநகராட்சி பள்ளிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் நல்ல தேர்ச்சி எடுத்து காட்டுகிறோம். இந்தாண்டு பிளஸ் 2வில் 94 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மக்கள் நலன் கருதி பல சேவைகளிலும் கவனம் செலுத்துகின்றனர். இருந்தும் 'நல்லாசிரியர்' விருது இரண்டு ஆண்டுகளாக கைக்கு எட்டாமல் கனவாகவே உள்ளது,'' என ஆசிரியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment