சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில் 1108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.) பொருந்தாது.
ஆர்.டி.இ. சட்டம் மற்றும் அதன் கீழ் மாணவர் சேர்க்கையில் 25 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பது ஆகியவற்றை எதிர்த்து சிறுபான்மை கல்வி நிறுவனங்கள், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்கில், அரசு நிதி உதவி பெறும் மற்றும் நிதி உதவி பெறாத சிறுபான்மை கல்வி நிறுவனங்களை ஆர்.டி.இ. சட்டம் கட்டுப்படுத்தாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இதையடுத்து, தமிழகத்தில் அரசு உதவி பெறும் 499 சிறுபான்மை பள்ளிகள், உதவி பெறாத 609 சிறுபான்மை பள்ளிகள் என மொத்தம் 1108 பள்ளிகளுக்கு ஆர்.டி.இ. சட்டம் பொருந்தாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளாக இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளுக்கு ஆர்.டி.இ. சட்டம் பொருந்தாது என்பதால் ஆர்.டி.இ. இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் மொத்த இடங்களின் எண்ணிக்கை கணிசமாக சரியும்.
சுப்ரீம்கோர்ட் உத்தரவை பின்பற்றும் பள்ளிகள் எவை என்பதை அந்தந்தப் பகுதி பெற்றோர் கண்டறிந்து, தங்கள் குழந்தைகளை சேர்க்க இந்த ஆண்டில் போதுமான கால அவகாசம் இனி கிடைக்குமா என்பது தெரியவில்லை.
No comments:
Post a Comment