Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Thursday, 30 January 2014

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்


தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.

ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.

பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன.

சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக் கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக இருக்கும் என்பதால் இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும் அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை.

மேலூர் அரசு பெண்கள் பள்ளி மாணவிகள் தயாரித்த மாதிரி ராக்கெட்


மதுரை மாவட்டம் மேலூர் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் மேலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் 4000 மாணவிகள் படிக்கின்றனர். இந்த மாணவிகள் ஆசிரியர் சூரியகுமார் தலைமையில் பல்வேறு ஆராய்ச்சிப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலூர் பகுதிகளில் பரவிய டெங்கு காய்ச்சலுக்கு பல ஆயிரக்கணக்கான தட்டாம்பூச்சிகள் அழிவதே காரணம் என்று ஆராய்ச்சி செய்து அந்த அறிக்கையை அரசுக்கு அனுப்பி பொதுமக்களின் பாராட்டைப் பெற்றனர். இவ்வாறு பல்வேறு ஆராய்சிகளில் ஈடுபட்டுள்ள இந்த கிராமப்புற மாணவிகள் தற்போது விண்வெளி ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதன் முதல் கட்டமாக ஆசிரியர், ஆசிரியைகளின் உதவிகளுடன் விண்வெளியில் ஏவப்படும் ராக்கெட்டு தயாரிப்பில் தீவிரமாக மாணவிகள் ஈடுபட்டுள்ளனர். தற்போது மங்கள்யான் ராக்கெட் மாதிரியை தயாரித்துள்ள மாணவிகள், விரைவில் மேலே பறக்கும் ராக்கெட் தயாரிக்க இருப்பதையும் ஆர்வத்துடன் தெரிவித்தனர்.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும்; தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவு

பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த விவரங்களை, பிப்ரவரி 15–ந்தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஒவ்வொரு மாநிலத்தின் தலைமை தேர்தல் அதிகாரி, தலைமை செயலாளர் ஆகியோருக்கு இந்திய தேர்தல் கமிஷன் எழுதியுள்ள 3 பக்க கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–
3 ஆண்டுகள் பணி
பாராளுமன்ற தேர்தலை நேர்மையாகவும் சுதந்திரமாகவும், நடத்துவதற்கு இந்திய தேர்தல் கமிஷன் முன்வந்துள்ளது. அதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்வது குறித்த சில முடிவுகளை தேர்தல் கமிஷன் எடுத்துள்ளது.
அதன்படி தேர்தல் பணியில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பணியாற்றும் எந்தவொரு அதிகாரியும் அவரது தற்போது பணியாற்றும் மாவட்டத்தில் தொடர்ந்து இருக்க அனுமதிக்க கூடாது. அவர்கள் தங்கள் சொந்த மாவட்டத்தில் பணியில் இருக்க கூடாது. கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளை முடித்திருக்கும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தில் பணியாற்றக்கூடாது அல்லது 31.5.2014–க்குள் 3 ஆண்டுகளை முடித்திருக்கும் அதிகாரிகள் அந்த மாவட்டத்தில் பணியில் தொடர்ந்து நீடிக்கக்கூடாது. தேர்தல் கமிஷன் அறிவிக்கும் இந்த தேதியை பல மாநில அரசுகள் சரிவர பின்பற்றவில்லை என்று புகார்கள் வருகிறது.
எந்தெந்த அதிகாரிகள்?
எனவே தேர்தல் கமிஷன் குறித்துள்ள இந்த தேதியை கணக்கிட்டு தேர்தல் கமிஷனின் உத்தரவை பின்பற்ற வேண்டும். இந்த உத்தரவு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், உதவி அதிகாரிகள் போன்றவர்களுக்கு மட்டுமல்ல துணை கலெக்டர்கள், தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் போன்ற அதிகாரிகளுக்கும் பொருந்தும்.
போலீஸ் துறையை பொறுத்தவரையில் தேர்தல் கமிஷனின் அறிவுரை சரக ஐ.ஜி., டி.ஐ.ஜி, ஆயுதப்படை கமாண்டன்ட், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் சூப்பிரண்டு, துணை மண்டல தலைமை அதிகாரி, இன்ஸ்பெக்டர்கள் போன்றவர்களுக்கும் பொருந்தும். மேலும் சப்–இன்ஸ்பெக்டர்கள் தங்கள் சொந்த தொகுதிக்குள் பணியாற்ற கூடாது.
அவர்களும், கடந்த 4 ஆண்டுகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பகுதிகளில் இருக்க கூடாது அல்லது. 31.05.2014 அன்று 3 ஆண்டுகளை முடித்திருந்தால் அந்த இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட வேண்டும். பணியிட மாற்றம் செய்யும் போது யாரும் சொந்த மாவட்டத்திற்கு அனுப்பப்படக்கூடாது.
15–ந்தேதிக்குள்...
கடந்த தேர்தலில் சரியாக பணியாற்றாத அதிகாரிகள், குற்ற விசாரணைக்கு உட்பட்டு இருப்போர், வழக்கில் சிக்கியிருப்போர் போன்றவர்களை தேர்தல் பணியில் நியமிக்கக்கூடாது.
இந்திய தேர்தல் கமிஷன் குறிப்பிட்டுள்ள இந்த அறிவுரையின் கீழ் பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டிய அனைவரும் உடனடியாக அந்தந்த மாவட்டங்களை விட்டு வெளியே அனுப்பட வேண்டும். ஏனென்றால் கடந்த காலங்களில் இந்த உத்தரவுகளை முறையாக பின்பற்றுவதில்லை என்ற புகார்கள் வந்து உள்ளனர். தேர்தல் கமிஷன் கொடுத்துள்ள இந்த உத்தரவுகளை பின்பற்றியது குறித்த விவர அறிக்கையை பிப்ரவரி 15–ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு தமிழக அரசு அறிவிப்பு

ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சத்துணவு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
3 ஆயிரம் குழந்தைகள்
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான 87 ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன.
செவித்திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான மையங்கள் 32, மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான மையங்கள் 32, பார்வைத்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான மையங்கள் 15, மூளைமுடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான மையம், திருச்சியில் ஒரு மையம், சென்னையிலுள்ள மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கும் 5 ஆரம்பநிலைப்பயிற்சி மையங்கள் மற்றும் திருச்சியில் உள்ள மண்டல வள மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கும் 2 மையங்கள் என ஆக மொத்தம் 87 ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் 3,67 குழந்தைகள் பயில்கின்றனர்.
இணை உணவும், மதிய உணவும்
3.2.14 முதல் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அங்கன்வாடி மையங்களிலிருந்து, இணை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
இந்த மையங்களில், பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவுடன் இருப்பதால், இந்த குழந்தைகள் அனைவருக்கும் கீழ்கண்டவாறு உணவு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முட்டை, சுண்டல்
*6 மாதம் முதல் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தைகள்: 190 கிராம் எடையுள்ள இணை உணவு வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வகையில் வாரம் ஒருமுறை வழங்கப்படும்.
*ஒரு வயதிலிருந்து 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள்: 190 கிராம் எடையுள்ள இணை உணவு வீட்டிற்கு எடுத்துச்செல்லும் வகையில் வாரம் ஒரு முறையும், மதிய உணவுடன் வாரம் மூன்று நாட்கள் முட்டையும், மற்றும் 2 நாட்களுக்கு சுண்டலும் வழங்கப்படும்.
இத்திட்டத்திற்காக, அரசு ரூ.46.64 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டம் 3.2.14 முதல் அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.
அமைச்சர் தொடங்கி வைத்தார்
சமுக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர், இத்திட்டத்தினை 29–ந்தேதியன்று (நேற்று) மாநில வள மற்றும் பயிற்சி மையத்தில், சென்னையில் செயல்படும், 5 ஆரம்பநிலை பயிற்சி மையங்களில் பயிலும் 125 குழந்தைகளுக்கு, மதிய உணவு மற்றும் இணை உணவு வழங்கித் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் ப.சிவசங்கரன், மாநில ஆணையர் க.மணிவாசன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நூறு வயது மூதாட்டியைப் பராமரிக்கும் மாணவிக்கு விருது

நூறு வயது மூதாட்டியைப் பராமரித்து வருவதற்காக மதுரை மாவட்டம் இடையப்பட்டியில் 6-வது படிக்கும் மாணவி அர்ச்சனாவுக்கு ஹோப் ஹீரோ என்கிற விருது வழங்கப்பட்டது.
 இந்த மாணவி அந்தப் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். அந்த ஊரிலேயே உள்ள பெரியாண்டி என்னும் மூதாட்டி குளிக்கவும், உணவருந்தவும் உதவி செய்துவருகிறார்.
 அவரது மனிதாபிமானத்தைப் பாராட்டி அவருக்கு திரிபுரா அறக்கட்டளை சார்பில் இந்த விருது வழங்கப்பட்டது.
 சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது.
 அதேபோல், பாம்பிடம் இருந்து சிறிய குழந்தையைக் காப்பாற்ற உதவியதற்காக வேலூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்த விஷாலானி என்கிற சிறுமிக்கும், பள்ளியை விட்டு இடையிலேயே நின்ற சக வகுப்புத் தோழனை தொடர்ந்து படிக்க உதவி செய்ததற்காக கோவை மாவட்டம் பன்னிமடையைச் சேர்ந்த மைதின் ராஜ் என்கிற சிறுவனுக்கும் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.
 திரிபுரா அறக்கட்டளை சார்பில் இந்தியா முழுவதும் பள்ளிச் செல்லும் குழந்தைகளுக்காக 86 டியூஷன் சென்ட்டர்கள் நடத்தப்படுகின்றன. இதில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழைக் குழந்தைகளுக்கு யோகா உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்த அறக்கட்டளையின் இயக்குநர் இலைன் கூப்பர் கூறினார்.
 இந்த மையங்களில் படிக்கும் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக இந்த ஹோப் ஹீரோ விருது வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

16,000 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்: ராமதாஸ்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்கீழ் நியமிக்கப்பட்ட 16,549 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கம்ப்யூட்டர், தையல் ஆகிய பாடங்களை கற்றுத் தருவதற்காக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 16,549 பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் பகுதி நேர ஆசிரியர்கள் என்றாலும் அனைத்துப் பணி நாள்களிலும் முழுநேரமும் பணியாற்றுகின்றனர்.
முழு ஆசிரியர்களுக்குரிய அனைத்துப் பணிகளையும் செய்யும் இவர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது.
பகுதி நேர சிறப்பாசிரியர்களில் பலர் வேறு மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டிருப்பதால், அவர்கள் பெறும் ஊதியம் உணவு, தங்குமிடத்துக்குக்கூட போதுமானதாக இல்லை.
தங்களை நிரந்தர ஆசிரியர்களாக அறிவிக்க வலியுறுத்தி கடந்த ஓராண்டாகப் போராடியும் அரசு கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில் முழுநேர சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 8-5-2013-இல் வெளியிட்டது. இவர்களுக்கு ரூ. 20,000 ஊதியம் வழங்கப்படவுள்ளது.
பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு அவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவர்களில் தகுதி உடையவர்களுக்கு சிறப்பு தகுதித் தேர்வு நடத்தி பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இதற்கான அறிவிப்பை வியாழக்கிழமை தொடங்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் சலுகை மதிப்பெண் வழங்கப்படுமா?

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்க வேண்டும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், இப்போதாவது இந்தச்சலுகையை முதல்வர் வழங்குவாரா? என தி.மு.க. தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காத அதிகாரிகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. அதிகாரிகள் மீது நடவடிக்கை என்றால் அரசு மீது மறைமுகமான குற்றச்சாட்டு என்றுதான் பொருளாகும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 150. தேர்ச்சி பெறுவதற்கு குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அதாவது 90 மதிப்பெண் பெற வேண்டும்.
ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்தது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தேர்வாகி இருந்தனர். எனவே, குறைந்தபட்சம் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்காவது தேர்ச்சி மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்படும் என எதிர்பார்த்தபோதிலும், தேர்ச்சி மதிப்பெண்ணில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் ஆகியோருக்கு உயர் வகுப்பினரைப் போலவே 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சி மதிப்பெண்ணாக தமிழகத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலுக்கு விரோதமானது ஆகும். அதன் வழிகாட்டுதலின் படி, ஆந்திரப் பிரதேசத்தில் உயர் வகுப்பினருக்கு 60, பிற்படுத்தப்பட்டோருக்கு 50, தாழ்த்தப்பட்டோருக்கு 40 சதவீத மதிப்பெண்ணும், அசாமில் உயர் வகுப்பினருக்கு 60, மற்றவர்களுக்கு 55 சதவீத மதிப்பெண்ணும், ஒரிசா மாநிலத்தில் உயர் வகுப்பினருக்கு 60, பிற வகுப்பினருக்கு 50 சதவீத மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் அதிமுக அரசு அனைத்துப் பிரிவினருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 60 சதவீதம் என நிர்ணயித்துள்ளது என்பது பெரியாரின் சமூக நீதி கொள்கைக்கு எதிரானது. இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் விரோதமானது ஆகும்.
2013 ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்விலாவது இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண்ணில் மாற்றம் செய்ய வேண்டும் என கோரினேன். ஆனால், இதை அதிமுக அரசு காதில் போட்டுக்கொள்ளவில்லை.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை அளிக்காதது குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய சென்னை மண்டல இயக்குநருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.
அந்தப் புகாரை ஆய்வு செய்த வெங்கடேசன் தமிழக அரசுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதில், தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சிலின் வழிகாட்டுதலை ஏற்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை 181-ல், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு சலுகை வழங்க வழிசெய்யப்பட்டுள்ளது என்றும், ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னை மாவட்ட பள்ளிகளில் பிளஸ் 2 செய்முறை தேர்வு: பிப்.5ம் தேதி தொடக்கம்


சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வுக்கு முன்னதாக அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்முறைத் தேர்வுக்கான தேதிகளை முடிவு செய்வார்கள். இருப்பினும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் செய்முறைத் தேர்வுகளை நடத்தி முடித்து அதில் மாணவர்கள் பெற்ற அகமதிப்பெண்களை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர். அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் 54 ஆயிரம் மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

எக்ஸ்ட்ரா தகவல்

சென்னை மாவட்ட பள்ளிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் தேதி இன்று வெளியாகும் என தெரிகிறது.

டைப்பிஸ்ட் தேர்வில் தகுதி பிப்.3ல் சான்று சரிபார்ப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிவிப்பின்படி சுருக்கெழுத்து தட்டச்சர், நிலை 3 பதவிக்கான எழுத்து தேர்வு கடந்த ஆண்டு ஜூலை 7ம் தேதி நடந்தது. சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 பதவிகளுக்கான மீதம் உள்ள காலிப் பணியிடங்களில் 165 இடங்களுக்கு 3ம்கட்ட சான்று சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீடு பிப்ரவரி 3, 4ம் தேதிகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடக்கிறது. இந்த கவுன்சலிங் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தவிர அழைப்புக் கடிதங்களும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த தேர்வுக்காக கணினி மூலம் விண்ணப்பிக்கும்போது 10ம் வகுப்பு மற்றும் எஸ்எஸ்எல்சி வகுப்பை தமிழ் வழியில் படித்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமை ஆசிரியரிடம் தமிழ் வழியில் படித்ததற்கான சான்று வாங்கி வர வேண்டும். தேர்ச்சி பெற்றுள்ள 165 பேரில் 3ம் தேதி நடக்கும் கவுன்சலிங்கிற்கு வர இயலாமை, பணியில் சேர இயலாமை, ஏதாவது காரணத்துக்காக விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளாதது  ஆகியவற்றால் ஏற்படும் காலி இடங்களை நிரப்ப 87 பேரின் எண்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அவர்கள் அப்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப 4ம் தேதி நடக்கும் கவுன்சலிங்கில் அனுமதிக்கப்படுவார்கள்.

முறைகேடுகளை தடுக்க பொதுத்தேர்வு பணிக்கு ஆசிரியர்களை தேர்வுத்துறை இயக்குநரகம் நியமிக்கும் புதிய முறை அமல்


முறைகேடுகளை தடுக்கும் வகையில் எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத்தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணிகளை தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வருகிறது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் மாதம் 3ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை போன்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வுகள் மார்ச் மாதம் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தநிலையில், தேர்வுக்கான பணியாளர்களை நியமனம் செய்யும் நடைமுறைகளையும் மாற்றி அமைத்து தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுவரை ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரே எந்தந்த பள்ளிகளுக்கு எந்தெந்த ஆசிரியர், தலைமை ஆசிரியர், அறை கண்காணிப்பாளராக பணியாற்ற வேண்டும் என்பதை முடிவு செய்வார். ஒரு சில மாவட்டங்களில் குறிப்பிட்ட சில ஆசிரியர்களை குறிப்பிட்ட சில பள்ளிகளுக்கு தேர்வு பணிகளில் நியமனம் செய்வதாகவும், இதனால் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற அவர்கள் உதவுவதாகவும் தேர்வுத்துறைக்கு புகார்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இதில் சில தனியார் பள்ளிகளின் தலையீடு அதிக அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில் தேர்வுக்கு பணியாளர்கள் நியமனத்தை தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. முதன்மை கண்காணிப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், அறை கண்காணிப்பாளர், பறக்கும்படை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட வேண்டியவர்களின் பெயர் மற்றும் விபர பட்டியலை தேர்வுக்கு சிடி வடிவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் கேட்டு பெற்றுள்ளது. மேலும் தேர்வு மையங்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு மையத்திலும் தேர்வு எழுதுகின்ற மாணவ மாணவியர் எண்ணிக்கையும் தேர்வுத்துறையிடம் உள்ளது. அதன் அடிப்படையில் தேர்வு மையங்களுக்கு ஆசிரியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். தேர்வுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர் வரை இந்த விபரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். 

இதனை போன்றே விடைத்தாள் திருத்தும் பணிகளிலும் மாற்றம் செய்யப்பட உள்ளது. விடைத்தாள் திருத்தும் மையங்களில் முதன்மை தேர்வர்கள், துணை தேர்வர்கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் போன்ற அலுவலர்களையும் தேர்வுத்துறை இயக்குநரகமே நேரடியாக முடிவு செய்யும். முன்கூட்டியே இதற்காக ஆசிரியர்கள் விபரங்களை கேட்டுப்பெற்று நியமன பணிகளை மேற்கொள்ள தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன

டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு, 8 மணி நேரம் காத்திருந்த அதிகாரிகள்: யாருமே வராததால் ஏமாற்றம்


ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் நாகர்கோவில் மையத்தில் யாருமே வருகை தரவில்லை, அலுவலர்கள் மட்டும் 8 மணி நேரம் காத்திருந்துவிட்டு திரும்பினர். தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் பணிக்கு ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை 32 மாவட்டங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இதில் பங்கேற்காதவர்களுக்கும், கடந்த 2012ல் தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கும் மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

சான்றிதழ் சரி பார்க்க அழைக்கப்பட்டு அப்போது வராதவர்களும் தேர்வு எழுதிய மாவட்டங்களில் நடக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மையத்திற்கு உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் சென்று கலந்து கொள்ளலாம் என்றும், இதுவே கடைசி வாய்ப¢பாகும். இனி எந்த வாய்ப்பும் வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
குமரி மாவட்டத்தில் முதல்தாள் தேர்வில் அழைப்பு விடுக்கப்பட்ட அனைவரும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டனர். 2ம் தாளில் 347 பேருக்கு 341 பேர் மட்டும் கலந்துகொண்டனர். 6 பேர் கலந்துகொள்ளவில்லை. 

இதனை போன்று 2012 தேர்வில் வெற்றிபெற்ற சிலரும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்ளாமல் விடுபட்டிருந்தனர். நேற்று சான்றிதழ் சரிபார்ப்புக்காக நாகர்கோவில் எஸ்எல்பி அரசு மேல்நிலை பள்ளியில் உள்ள மையத்தில் காலை 9 மணி முதல் அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் தேர்வர்கள் யாரும் வருகை தராததால் மாலை 5 மணி வரை காத்திருந்துவிட்டு அலுவலர்கள் திரும்பி சென்றனர்.

கணவர் வருமானத்தை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் தேவையில்லை


கர்நாடகாவில் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ராகவேந்திராவுக்கும், தென்கனரா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் ரஷ்மிக்கும் 2003ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளார். சில ஆண்டுகளுக்கு பிறகு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ராகவேந்திரா கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அதில் திருமணம் முடிந்த பின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள எனது பெற்றொர் வீட்டில் வசித்தோம். 

எனது மனைவி மேல்படிப்பு படிப்பதற்காக தாவணகெரெ சென்றார். நான் மைசூரில் தனியாக கிளினிக் தொடங்கி நடத்தியதுடன், அங்கு வீடும் வாடகை எடுத்து வசித்து வருகிறேன். கடந்த 2006ம் ஆண்டு குழந்தை பேறுக்காக தாய் வீட்டிற்கு சென்ற எனது மனைவி மீண்டும் வீடு திரும்பவில்லை. பலமுறை வீட்டிற்கு வந்து குடும்பம் நடத்தும்படி வலியுறுத்தியும் கேட்கவில்லை. இதனிடையில் வரதட்சணை கேட்டு நானும், எனது பெற்றொரும் துன்புறுத்துவதாக எங்கள் மீது போலீஸ் நிலையத்தில் பொய் வழக்கு கொடுத்தார். இவ்வளவு தொல்லை கொடுத்தவருடன் வாழ் விரும்பவில்லை என்று கூயிருந்தார். 

கணவர் ராகவேந்திராவின் புகாருக்கு பதில் மனுதாக்கல் செய்த ரஷ்மி, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் ரூ.20 லட்சம் வரதட்சணை கொண்டு வரும்படி தொல்லை கொடுத்தனர். கணவருடன் நான் வாழ மாமனார், மாமியார் வாய்ப்பு கொடுக்காமல் தடுத்தனர். என்னை சரியாக கவனித்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருந்தார். இவ்வழக்கை விசாரணை நடத்திய நீதிமன்றம், இருவரும் பிரியாமல் சேர்ந்து வாழ முயற்சிக்கும்படி ஆலோசனை வழங்கியது. அப்போது எனது பெற்றோருடன் வாழ பிடிக்கவில்லை என்றால், மைசூரில் நான் வாடகைக்கு எடுத்து வசித்து வரும் வீட்டிற்கு வரும்படி ராகவேந்திரா கேட்டார். 

அதற்கு ஒப்புகொள்ளாத ரஷ்மி, பெங்களூரில் வீடு வாடகை எடுத்தால் வசிப்பதாக கூறினார். ஆனால் அதை ராகவேந்திரா ஏற்றுகொள்ளவில்லை. எங்கு வசிப்பது என்ற விஷயத்தில் கணவன்-மனைவி இடையில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இறுதியாக ராகவேந்திரா விவாகரத்தில்  உறுதியானார். ரஷ்மி ஜீவனாம்சம் கேட்பதில் உறுதியாக இருந்தார். இந்த விவாகரத்து வழக்கு விசாரணை முடிந்து நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில், வழக்கில் தொடர்புடைய கணவர், மனைவி இருவரும் சமூகத்தில் மருத்துவம் படித்த பட்டதாரியாக உயர்ந்த அந்தஸ்த்தில் உள்ளனர். 

அவர்கள் இருவரில் ஏற்பட்ட மனகசப்பை போக்கி சுமுக வாழ்வுக்கு நீதிமன்றம் பல சந்தர்ப்பங்கள் கொடுத்தும் இருவரும் பயன்படுத்தி கொள்ளவில்லை. அவர்கள் சேர்ந்து வாழ நீதிமன்றம் எடுத்த முயற்சி அனைத்தும் தோல்வியில் முடிந்தது. மேலும், விவாகரத்து பெற்றுள்ள ரஷ்மி, தனது கணவரிடம் ஜீவனாம்சம் கேட்டுள்ளார். ரஷ்மியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், கணவர் ராகவேந்திராவை விட கூடுதல் வருமானம் (மாதம் ரூ.1.30 லட்சம்) இருப்பதால், கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 

அதே சமயத்தில் மகனுக்கு 7 வயது நிரம்பியுள்ளதால், தாயின் அரவணைப்பில் வசிப்பது அவசியம். குழந்தைக்கு தரமான கல்வி, உணவு, ஆடை உள்பட அவர் தேவைக்கான செலவுகளை ராகவேந்திரா வழங்க வேண்டும் என்று கூறி விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தார். - See more at: http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=77515#sthash.v5rFUvbs.dpuf

சிறுநீர் குடித்து உடல் நலம் பேணும் யோகா ஆசிரியர்

யோகா ஆசிரியர் ஒருவர் யோகாவோடு சிறுநீர் குடித்து உடல் நலம் காத்து வருகிறார்.
தேனியை சேர்ந்தவர் முருகானந்தம். அரசு மருத்துவமனையில் நலக்கல்வியாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். இவர் 25 வயதில் இருந்து யோகாசனம் செய்து வருகிறார். பயிற்சி முடித்து கடந்த 20 ஆண்டுகளாக யோகாசனம் கற்றுத் தருகிறார். இவரது மனைவி சித்த மருத்துவர் விஜயலட்சுமி. தற்போது 65 வயதான முருகானந்தம் இரவு 9 மணிக்குள் வேலைகளை முடித்து இரவு படுக்கைக்கு செல்கிறார்.
அடுத்த நாள் அதிகாலை 2 மணிக்கு எழுந்து காலைக் கடன்களை முடித்து இரண்டு மணி நேரம் யோகசனம் செய்கிறார். அதன்பின் பிறருக்கு யோகாசனம் கற்றுத் தருகிறார். ஆர்வமுள்ளவர்களுக்கு மாலை தியானமும் பயிற்சியும் சொல்லித் தருகிறார்.இவர் கடந்த 6 ஆண்டுகளாக ஒரு வேளை மட்டுமே உணவு உட்கொள்கிறார். வெண்டை, கேரட் உள்ளிட்ட பச்சை காய்கறிகளை சாப்பிட்டு வருகிறார்.
மேலும் பல, ஆண்டுகளாக தன்னுடைய சிறுநீரை பிடித்து குடித்து வருகிறார். சிறுநீரை பிடித்து சேகரித்து வைத்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளிக்கிறார். இது குறித்து கேட்டால் சிறுநீர் "தெரபி" என்று கூறுகிறார்.
முருகானந்தம் சொல்வதை கேட்போம். சித்தர்கள் நமக்கு வழங்கியது சிறுநீர் மருத்துவம். இது குறித்து போகர் சித்தர் பாடல் வரியில், "செய்யவே பதினெட்டுக் குட்டம் சூலை, தீரவே சிறுநீரில் கட்சங் கேளு, பையவே பேய்த்தேற்றான ஒன்று செய்து வைத்துக் கொண்டு, நையவே காலைதனில் எழுந்திருந்து நன்மையுடன் சிறுநீரில் ஒரு சேர் வாங்கி.." என்று செல்கிறது.
அதுபோல், "அரவக்கடி யகலவங்கு சிறுநீர் சிரங்கை, பரவக்குடி விஷம்படும்" என்று கூறப்பட்டுள்ளது. இதன் பொருள் பாம்பு கடித்தவுடன் சிறுநீர் பிடித்து குடித்துவிட்டால் விஷம் குறைந்து விடும் என சொல்லப்பட்டுள்ளது. பல தீராத நோய்களையும் தீர்க்க வல்லது. சித்தர் பாடல்களில் சிறுநீர் "அமுரி, தேகந்தண்ணீர், சந்திர புஷ்கரணி" போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
சிறுநீரை உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து குளித்தால் தோல் வியாதிகள் தீரும். முடி கருக்கும். உலகத்தில் முதல் மருந்து சிறுநீர், இதை உணர்ந்து உண்ண அகலில் உள்ள தீபம் போல் வாழ்வு ஒளிரும். இது போன்று பல பாடல்கள் கூறப்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் மேய்ந்து வரும் ஆடு, மாடுகளின் சிறுநீரை பிடித்து சேகரித்து அதை கொஞ்சம் கொஞ்சமாக மிளகில் கலந்து வெயிலில் பக்குவமாக தொடர்ந்து காய வைத்து, அதை பொடி செய்து மாத்திரையாக மாற்றியும் அருந்தலாம். இந்த சிறுநீர் மருந்தால் பல தீர்க்கப்படாத வியாதிகள் தீர்க்கப்பட்டுள்ளது. டாக்டர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை "சிறுநீர் தெரபி" எடுத்து வருகின்றனர். முக்கியமான விஷயம் அவர் அசைவ உணவு உண்பது, மது பழக்கம் உள்ளிட்ட தீய பழக்க வழக்கங்களுக்கு ஆட்பட்டிருக்க கூடாது, என்றார்.
இது குறித்து, தேனி மருத்துவகல்லூரி மருத்துவமனை சித்த மருத்துவ அலுவலர் சங்கர் கூறுகையில், "சித்த மருத்துவத்தில் "அமுரி" குறித்து பல கருத்துகள் உள்ளது. இது தான் என்று அறுதியிட்டு கூற முடியவில்லை. இது குறித்து ஆராய்ச்சியும் விவாதமும் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
தேனி சிறு நீரகவியல் மருத்துவர் அபிமன் கவுதம் கூறுகையில், "அலோபதி மருத்துவமுறையில் இது குறித்து எந்தவித தகவலும் இல்லை. இணையதளங்களில் இதுகுறித்து செய்திகள் உலா வருகிறது. இது குறித்து கூறுபவர்கள் தான் இதை நிரூபிக்க வேண்டும்" என்றார்.

அரசு பள்ளிகளில் "இ-வித்யா' திட்டம் துவக்கம் : எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறக்கும்


அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும், "இ-வித்யா' திட்டம், ஏனாமில் துவக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் அமைந்துள்ள, பெரும்பாலான தனியார் பள்ளிகளில், எஸ்.எம்.எஸ்., மூலமாக, மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிக்கு வராமல் "ஆப்சென்ட்' ஆகும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, ஆரம்பத்தில், எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் பறந்தது. அடுத்தக்கட்டமாக, விடுமுறை, சிறப்பு வகுப்பு, பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் போன்ற விபரங்கள் தெரிவிக்கப்பட்டன.
தற்போது, தினசரி தேர்வு விபரங்கள், படிக்க வேண்டிய பாடங்கள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், எஸ்.எம்.எஸ்., மூலமாகவே பெற்றோர்களுக்கு தினசரி தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிக்கு செல்லும் தங்களது பிள்ளைகள் குறித்த விபரங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிவதால், இந்த திட்டம், பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த திட்டத்தை, அரசு பள்ளிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை, பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும், "இ-வித்யா' திட்டம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதன் முறையாக, ஏனாம் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை, கல்வித் துறை செயலர் ராகேஷ் சந்திரா, துவக்கி வைத்தார். மல்லாடி கிருஷ்ணாராவ் எம்.எல்.ஏ., ஏனாம் மண்டல நிர்வாகி கணேசன், சர்வ சிக்ஷா அபியான் திட்ட அதிகாரி ராமராவ், பள்ளிக் கல்வி இயக்குனரின் பிரதிநிதி சாய்நாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதற்கட்டமாக, ஏனாம் நகரப் பகுதியில் உள்ள ராஜிவ்காந்தி அரசு ஆங்கில உயர்நிலைப்பள்ளி, தரியல்திப்பா, நாராயணன் அரசு உயர்நிலைப் பள்ளி, கிரையம்பேட்டாவில் உள்ள காமராஜர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில், "இ-வித்யா' செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
சர்வ சிக்ஷா அபியான் திட்டத்தின் உதவியில் செயல்படுத்தப்படும், "இ-வித்யா' திட்டம், ஏனாமில் உள்ள மற்ற அரசு பள்ளிகளுக்கும், படிப்படியாக விரிவுப்படுத்தபட உள்ளது. இதற்கான சாப்டுவேரை, தேசிய தகவல் மையம் உருவாக்கி தந்துள்ளது.
இதுகுறித்து, கல்வித் துறை செயலர் ராகேஷ் சந்திரா கூறும்போது, ""இ-வித்யா' திட்டம், புதுச்சேரியிலும், மற்ற பிராந்தியங்களிலும் விரைவில் அமல்படுத்தப்படும்' என, தெரிவித்தார்.

செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் அரசுமருத்துவமனையில் பணியாற்ற தடை

தமிழகத்தில் அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளை, போராட்டம் முடியும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என, அரசு தடை விதித்துள்ளது.

தமிழகத்தில் 23 அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. தமிழகத்தில் அரசு செவிலியர் பள்ளியில் படித்து முடித்தவர்களுக்கும், தனியார் பள்ளியில் படித்தவர்களுக்கும் அரசு தேர்வு நடத்தி வேலைவாய்ப்பளிக்க வேண்டும், என, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதில், அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் வாரத்தில் இரண்டு நாட்கள் தான் வகுப்புகளில் அமர்கின்றனர். மற்ற நாட்கள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுகின்றனர். அதே நேரத்தில் தனியார் செவிலியர் பள்ளியில் படிப்பவர்கள் வாரத்தில் 2 மணி நேரம் தான் மருத்துவமனை பயிற்சியில் ஈடுபடுகின்றனர். மற்ற நாட்களில் வகுப்புகளில் அமர்கின்றனர். இதனால் தனியார் செவிலியர்கள் அரசு தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறுவார்கள். இதனால் முன்பிருந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என கூறி அரசு செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் வார்டு பணிகளை புறக்கணித்துள்ளனர். தமிழகம் முழுவதும் மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், செவிலியர் மாணவிகளை அரசு மருத்துவமனையில் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். வகுப்புகளை மட்டும் நடத்துங்கள் என அரசு செவிலியர் பயிற்சி பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.