Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday 23 September 2014

மாணவர்களுக்கு இலவச காலணி வழங்கும் திட்டத்தில் குளறுபடி : 2011 - 12ல் எடுத்த கால் அளவிற்கு இந்த ஆண்டு வினியோகம்

மாணவர்களுக்கு, வழங்கியுள்ள இலவச காலணிகள், பழைய அளவை வைத்து தயாரித்து அனுப்பப்பட்டுள்ளதால், அவை, மாணவர்களுக்குப் பொருந்தாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் கூறுகின்றனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 14 வகையான இலவச திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
சீருடையில்ஆரம்பித்து, காலணி, புத்தகப் பை, கணித உபகரணப் பெட்டி, 'லேப்டாப்' மற்றும் மலைப்பிரதேச மாணவர்களுக்கு, கம்பளிச் சட்டை வரை, திட்டம் நீள்கிறது.
இதில், புத்தகப் பையும், காலணியும் ஆண்டுதோறும் வழங்கப்படுவது இல்லை. மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அரசு பள்ளிகளில், புதிதாக சேரும் மாணவ, மாணவியருக்கு, அனைத்து திட்டங்களும் வழங்கப்படுவதாக, அதிகாரிகள் கூறுகின்றனர்.தமிழக அரசு செயல்படுத்தும், 14 வகை திட்டங்களில், இலவச காலணி வழங்கும் திட்டம் மட்டும் குளறுபடியாக நடந்து வருகிறது.
கடந்த, 2011 - 12ல் திட்டம் அறிவிக்கப்பட்டு, மாணவர்களிடம், கால் அளவு எடுக்கப்பட்டது. 2012 - 13ம் கல்வி ஆண்டில், முதல் முறையாக, 78.82 லட்சம் மாணவர்களுக்கு, 104.15 கோடி செலவில், இலவச காலணிகள் வழங்கப்பட்டன.சரியாக கால் அளவு எடுக்காததால், பொருந்தாத காலணிகளை போட வேண்டிய நிலை, மாணவர்களுக்கு ஏற்பட்டது.இந்நிலையில், இரண்டாவது முறையாக, இந்த ஆண்டு, ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை பயிலும் 80 லட்சம் மாணவர்களுக்கு, இலவச காலணி வழங்கப்பட உள்ளது.இதற்காக தயாரான காலணிகள், மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. 2011 - 12ல் எடுத்த அளவின்படியே, இப்போதும் காலணிகள் வந்திருப்பதை கண்டு, ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவை, மாணவர்களுக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும், காலணியின் தரமும் சிறப்பாக இல்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்நிலையில், 'பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள காலணிகளை, மாணவர்களுக்கு வழங்க வேண்டாம்' என, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இலவச திட்டங்களை செயல்படுத்தும், தமிழ்நாடு பாடநூல் கழகம் உத்தரவிட்டு உள்ளது.இது குறித்து, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:இலவச சீருடை, பாடப் புத்தகம், நோட்டுப் புத்தகம் ஆகியவை மட்டும், மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தற்போது, காலணிகள் வந்துள்ளன.ஆனால், 'மாணவர்களுக்கு வழங்க வேண்டாம்' என, எங்களுக்கு, மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இதற்கான காரணம் தெரியவில்லை.காலணியின் தரம், உயர்வாக உள்ளது எனக் கூற முடியாது. தனியார் கடையில், 1,000 ரூபாய் கொடுத்து வாங்கும் காலணியே, ஆறு மாதம் தான் வருகிறது. எனவே, அரசு இலவசமாக கொடுக்கும் காலணியின் தரத்தை ஆய்வு செய்ய தேவை இல்லை.
இவ்வாறு, அந்த நிர்வாகி தெரிவித்தார்.

No comments:

Post a Comment