Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Sunday 26 January 2014

பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய கோரிக்கை

அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப் பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப தமிழக அரசு முடிவு செய்தது.

இதற்காக அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தியது. இடைநிலை ஆசிரியர் பணிக்காக ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ஐ ஏராளமானோர் எழுதியிருந்தனர்.

இதில் 12,596 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு பெற்றிருந்தனர். 3 ஆயிரம் பணியிடங்களுக்கு 12 ஆயிரம் பேர் தேர்வு பெற்றதால், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.

அதாவது ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 தேர்ச்சிப் பெற்று பதிவுமூப்பு அடிப்படையில் நியமனம் செய்யப்படுவர் என்று ஏற்கெனவே கல்வித் துறை அறிவித்திருந்தது.

ஆனால் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில் பதிவுமூப்புக்கு பதிலாக வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்வது போல, இடைநிலை ஆசிரியர் நியமனமும் இருக்கும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது.

அதாவது பிளஸ் 2-வில் எடுத்த மதிப்பெண், இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு, ஆசிரியர் தகுதிச் தேர்வு முறையே 15, 25, 60 மதிப்பெண்கள் என வெயிட்டேஜ் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.

இது தேர்ச்சி சதவீதத்துக்கு ஏற்ப மாறுபடும். இதனால் பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எண்ணியவர்கள் கலக்கமடைந்தனர்.

சான்றிதழ் சரிபார்க்கும் பணி: இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி ஜனவரி 20-ஆம் தேதி தொடங்கியது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்களுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வியாழக்கிழமை வரை இடைநிலை ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.

மேல்நிலை பள்ளி பாடப்பிரிவு அடிப்படை: சான்றிதழ் சரிபார்க்க வந்த இடைநிலை ஆசிரியர்கள் சிலர் கூறியது:
இடைநிலை ஆசிரியர் நியமனம், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ளது. இதனால் பதிவு மூப்பு அடிப்படையில் காத்திருந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

மேலும் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் இதுவரை மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதாவது மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்த மாணவர்களுக்கு 50 சதவீத இடங்கள், கலைப் பிரிவு மாணவர்களுக்கும், தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் தலா 25 சதவீத இடங்கள் என்ற அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் இருந்தது.

இப்போது அந்த முறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஆய்வக தேர்வு மூலமே 400 மதிப்பெண்கள் கிடைத்துவிடும். இதனால் வெயிட்டேஜ் முறையில் கணக்கிடப்படும்போது தொழில் பிரிவு மாணவர்கள் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.

இதேபோல் கலைப்பிரிவு மாணவர்களும் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர்.

ஆனால் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பிரிவு படித்தவர்கள் இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மேல்நிலைப் பள்ளியில் படித்த பாடப்பிரிவுக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment