Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Wednesday, 24 September 2014

மெல்லக் கற்போருக்கே ஆசிரியரின் அன்பும், கவனிப்பும், உறுதுணையும் தேவை

           

நன்கு கற்கும் பிள்ளைகளை விட ஒன்றுமே படிக்க தெரியாத பிள்ளைகளே நம்மை அதிகம் நேசிக்கின்றனர் .
நாம் அவர்களுடன் செலவிட்ட பொழுதுகளை எண்ணிப்பார்த்து நம்மை காணும் தோறும் இதயம் மலர புன்னகைக்கின்றனர் ,
நம் வருகைக்காக ,நம் வாய் வார்த்தைக்காக தடதடக்கும் இதயத்துடன் காத்திருக்கின்றனர் .
தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று விட்டதும் வெட்கச் சிரிப்புடன் நம்மை எதிர்க்கொள்கின்றனர். .
அதே பள்ளியில் மேல் வகுப்பை தொடர்ந்து படிக்கும் போது நம்மை காணும் போதெல்லாம் அகம் மகிழ்ந்து சிரிக்கின்றனர் .
அதில் பெருமளவு நன்றியறிதலையும் நம் இதயம் இனம் காணும் .அனுவித்துப் பாருங்கள் நண்பர்களே !
அதை விட பேரானந்தம் வேறென்ன இருந்து விடப்போகிறது இப்பிறவியில் !
தினம் தினம் ஹரிஹரனும் ,ப்ரியாவும் .பத்மாவும் என்னை பார்க்கும் பார்வையில் இனம் கண்டவை !
நன்கு படிக்கும் மாணவர்களை விட மெல்லக் கற்போருக்கே ஆசிரியரின் அன்பும், கவனிப்பும், உறுதுணையும் தேவை. அவர்களை தட்டிக் கொடுத்தால் அவர்கள் வாழ்வு சிறக்கும். ஆசிரியர்களுக்கும் மனநிறைவும், அந்த புண்ணியமும் கிடைக்கும்.

திருமதி .விஜயலட்சுமி ராஜா

அலுவலக பணிகளில் ஆசிரியரை ஈடுப்படுத்தக்கூடாது; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் அவர்கள் விடுத்த பேட்டியில், தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ள வழக்கு எண். W.P.NO.28785/2012.உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் (ஆசிரியர்களை) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்களை பல்வேறு பணிகள் செய்ய பயன்படுத்துகிறார்கள்.
அதில் சம்பள பட்டியல் தயாரிக்கும் பணிகளில் (ECS) ஈடுப்படுத்துவதால் ஆசிரியர் கற்பித்தல் பணி பாதித்து மாணவர்கள் தேர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் இதே நிலை உள்ளது. குறிப்பாக விழுப்புரம்மாவட்டம் உளூந்தூர்பேட்டை வட்டாரத்தில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலகத்தை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்பட்டது.
இதற்கு சென்னை உயர் நீதிமன்ரத்தின் நீதியரசர் திருமதி. உஷா பரந்தாமன் வழங்கிய தீர்ப்பில் ஆசிரியர்களை பல்வேறுபட்ட பணிகளுக்கு ஈடுப்படுத்தக்கூடாது "குறிப்பாக சம்பளம் பட்டியல் தயாரிக்கும் பணியில் (ECS) ஈடுபடுத்திடகூடாது, என்றும் அப்படி ஈடுபடுத்தினால் மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது பாதிப்படையும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு: தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவு ரத்து

இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணி நியமனத்துக்கு ‘வெயிட்டேஜ்‘ மதிப்பெண் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், தகுதித்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா உள்பட 18 பேர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த தனி நீதிபதி, ‘பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணிக்கான கவுன்சிலிங்கை நடத்திக்கொள்ளலாம். ஆனால், யாருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கக்கூடாது. ஏற்கனவே நடந்த கவுன்சிலிங்கின் போது பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டு இருந்தால் அவர்கள் பணியில் சேர தடை விதிக்கப்படுகிறது‘ என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் சோமையாஜி தனி நீதிபதியின் உத்தரவைஎதிர்த்து அரசு சார்பில் மனுதாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணை இன்று மதுரை ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சோமையாஜி கூறுகையில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு வெயிட்டேஜ் முறை சரியல்ல என்ற அடிப்படையில் தான் தனி நீதிபதி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். வெயிட்டேஜ் முறைப்படி ஆசிரியர்களை தேர்வு செய்வது சரியான நடைமுறைதான் என்று ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.எனவே தனி நீதிபதி ஆசிரியர் நியமனத்துக்கு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், ஆசிரியர் நியமனத்துக்கு தனி நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
ஆசிரியர் பணிக்கு 16 ஆயிரம் பேரின் சான்றிதழ் ஏற்கனவே சாரிபார்க்கப்பட்டு இருந்தது. ஆனால் பணி நியமனத்துக்கு தடை விதித்து இடைக்கால நீதிபதி உத்தரவிட்டுஇருந்தார். இதனால் அவர்களுக்கு பணி வழங்க முடியவில்லை. தனி நீதிபதியின் உத்தரவு மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ள நிலையில் அவர்களுக்கு பணி கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

அரசு ஊழியர்களுக்கு புதிய முறையில் சம்பளம்: இந்த மாதம் முதல் அமலாகிறது

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் மின்னணு முறையில் பட்டுவாடா செய்யப்பட்டாலும், சம்பள பட்டியல் தயாரிப்பது, பணம் பெற்று வழங்கும் அதிகாரிகள் அனுமதி வழங்குவது, கருவூலங்களில் சமர்ப்பிப்பது உள் ளிட்ட நடைமுறைகள் இன்னும் காகித வடிவில்தான் நடக்கிறது. இதை நவீனப் படுத்தும் வகையில், வலைதள பட்டியல் மென்பொருள் (Centralised Employees Data Base) முறையில் சம்பளம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.167.45 கோடி ஒதுக்கியது.
முதற்கட்டமாக அரசு பணியாளர் பற்றிய அனைத்து விவரங்களும் அடங்கிய ஒருமித்த தரவுத்தளம் (Web Payroll) ஏற் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை ஆகிய 3 துறைகளைச் சார்ந்த ஊழியர்களுக்கும் முதற்கட்டமாக வலைதள மென்பொருள் முறையில் செப்டம்பர் மாத சம்பள பட்டியலை தயாரித்து அனுப்ப அரசு உத்தரவிட்டுள்ளது.
இப்புதிய முறை அமல்படுத்தப் படுவதால், மாதத்தின் கடைசி வேலை நாளில் உறுதியாக சம்பளம் கிடைத்துவிடும். ஊழியர் கள் தங்கள் சம்பள விவரம், பிடித்தத் தொகை, சம்பள உயர்வு, பதவி உயர்வு, பணி மாறுதல், விடுப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். மாநிலத்தில் எந்த இடத்துக்கு மாறுதலில் சென்றாலும் சம்பளம் பெறுவதில் சிக்கல் வராது. சம்பளப் பட்டியலை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதனால் அடுத்தடுத்த மாதங்களில் அனைத்து துறைகளிலும் 9 லட்சம் அரசு ஊழியர்கள் பயனடைவர்.
இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த கருவூலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: இந்த புதிய முறையால், ஊழியர்கள் பல்வேறு விவரங்களை வெளிப்படையாக அறிந்துகொள்ள முடியும். காலியிடங்கள், பதவி உயர்வு, ஓய்வு பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை மாநில அளவில் அறிந்துகொண்டு மேல்நடவடிக்கை எடுக்க அரசுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.

தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்று 01.06.2006 முதல் பணிவரன்முறைப்படுத்தப்பட்ட இடைநிலை மற்றும்பட்டதாரி ஆசிரியர்கள் ,அவர்கள் பணியேற்ற நாள் முதல் பணிக்காலம் கணக்கிட்டு தேர்வுநிலை,பெற்றுத்தர முயற்சி செய்து வருகிறது. தேவைப்பட்டால் நீதிமன்றம் செல்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
அதற்குமுன்னர் அவ்வாறு நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தொகுப்பூதிய காலத்தினை தேர்வு நிலை வழங்க கணக்கில் கொள்ளுமாறு பள்ளிக்கல்விச்செயலர்,மற்றும் தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு விண்ணப்பம் முறையாக துறை ரீதியாக அனுப்புதல் வேண்டும்.
அவ்வாறு அனுப்ப வேண்டிய படிவம் இங்கே வெளியிடப்படுகிறது.வேண்டுவோர் தர விரக்கம் செய்து கொள்ளவும்
அனுப்பும் வழிமுறைகள்
1. இணைப்பில் கண்ட படிவத்தை தரவிறக்கம் செய்து அதில் விடுபட்ட இடங்களை பூர்த்தி செய்துகொள்ளவும்,(தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும்)
2.அப்படிவத்தினை 8 நகல்கள் தயார்படுத்தவும்.
3.AEEO/AAEEO அவ்ர்கள் மூலமாக 4 படிவங்கள் ஒப்படைக்கப்பட்டு அவற்றில்
1.AEEO
2.DEEO,
3.DEE
4.EDUCATIONAL SECRETARYஆகியோர்களுக்கு அனுப்பிவைக்க (ஒரு படிவம் ஓவ்வோர் அலுவலக நகல்எனக்கொள்வோம்) வேண்டும்
3. மீதமுள்ள 4 படிவங்களில் இரண்டின் மீது முதல் பக்கத்தின் தலைப்பின் மேல் “ முன் நகல் பணிந்து சமர்பிக்கப்படுகிறது” என சிவப்பு மையினால் எழுதி ஒன்றினை தொடக்கக்கல்வி இயக்குனருக்கும்,மற்றொன்றினை கல்விசெயலருக்கும் பெறுநர் முகவரியில் கண்ட விலாசத்திற்கு பதிவுத்தபால்(REGISTERED POST) மூலம் அனுப்பவும்.
4. ஒருநகல் நமது பொதுச்செயலர் முகவரிக்கு கையொப்பம் இட்டு அனுப்பவும்.
பொதுச்செயலர் முகவரி-
திருமிகு.செ.முத்துசாமி,Ex.MLC.
பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி,
#6.காலேஜ் ஹாஸ்டல் தெரு,
காந்திநகர்.
நாமக்கல்-637 001
5.மற்றொன்றை தன் நகலாக பாதுகாத்துக்கொள்ளவும்.

Tuesday, 23 September 2014

கல்விசார் கணினி வளங்கள் தயாரித்தல் பயிற்சிப் பணிமனையில் கல்வித்துறை முதன்மை செயலர் அவர்கள் பேசியது என்ன?




கல்விசெயலர் திருமதி சபிதா அவர்களை SCERT இயக்குனர் வரவேற்று ,ECS ,Digital lessons பற்றிய சில நடைமுறைகளை சுருங்கக் கூறி அமர, செயலர் அவர்கள் ஆசிரியர்களிடையே ஆசிரியர்களுக்காக உரையாற்றினார்….
“ பள்ளிக்கல்வி முதன்மைச் செயலரின் உரை மிக நேர்த்தியாக இருந்தது. ஆசிரியர்களை உற்சாகப்படுத்துவதாகவும், செயலில் இறங்கும் ஆற்றலைத் தருவதாகவும் இருந்தது.
பள்ளிக் கல்வித் துறைக்கென ஒரு தனி server இல்லாதது கண்டு எனக்கு வருத்தமாக இருந்தது. ஆகவே மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் இந்த செய்தியைக் கொண்டு சேர்த்து,அனுமதி பெற்றேன்.DATA BASE தகவல் முறைமைத் திட்டம் (EMIS) ,வழியாக அனைத்துப் பள்ளிக் கல்வித் துறைகளையும் இணைப்பதற்கான (Integration of School Educational Departments) முயற்சி இது. முதல் முயற்சியாக நம் தமிழகத்தின் அனைத்து ஆசிரியர்கள், குழந்தைகள்,பள்ளிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே நம் (ICT Award) விருது பெற்ற ஆசிரியர்களின் துணையும் கொண்டு அடுத்த ECS ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ECS-இன் தேவை
ஒரு சிலருக்குப் பேசினால் புரியும்,சிலருக்கு வரைந்தால் புரியும்..எல்லோருடைய புரிந்துகொள்ளலும் ஒரே மாதிரியாக இல்லை.சில விஷயங்களை ஒலி-ஒளி மூலம் காட்டினால் உடனே கிரகித்துக்கொள்வார்கள். அதை அவர்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்கள்.
பாடப் புத்தகங்களைத் தாண்டி, நம்மிடம் கல்வித்தொலைக்காட்சிப் படப்பதிவு நிலையம்(EDU TV STUDIO),பல்வேறு கல்வி செயற்கைக்கோள் இணைப்புகள்(EDU-SAT) செலவின்றி கிடைக்கின்றன.ஆனால் நாம் பயன்படுத்திக் கொள்வதில்லை.இது தவிர அண்ணா பல்கலைக்கழகத்திலும் நமக்கு ஒரு நிலையம் உள்ளது.அதைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.PART –II Scheme இல் இதற்கான நிதியுதவி ஒதுக்கி, முதலில் SCERT கடிதம் அனுப்பியது.

பல தனியார் நிறுவனங்கள் என்னை அணுகின. ஆனால் நான் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.ஏனெனில் ,நமது அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தவிர்த்து யாராலும் இதை சரியாகச் செய்யமுடியாது. உங்களைவிடக் குழந்தைகளை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. பாடநூல்களை மிகச் சரியாக குழந்தைகளிடம் சேர்க்க அவர்களால் மட்டும்தான் முடியும்.
நீங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு காணொலித் தகடும்(CD) மதிப்பீடு செய்யப்படும்.பாடப்பொருள் (CONTENT), பாடத்திட்ட வரைவு (Syllabus) சார்ந்தும்,எளிதில் மாணவர் புரிந்து கொள்ளும் விதத்திலும் மதிப்பீடு செய்யப்படும்.
இவற்றைத் தயார் செய்யும்போது வகுப்பு,பாடம், பாடப்பொருள் ஆகியவை தெளிவாக இருக்கவேண்டும். தர்க்கரீதியாக சரியாக(Logic) இருக்க வேண்டும்.அது மிக முக்கியம்.இவற்றையெல்லாம் உங்கள் மனதில் கொண்டு உருவாக்கினால் அதுவே மிகநல்ல வளமாக இருக்கும்.
கற்பனை செய்து பாருங்கள்,எங்கோ ஒரு கிராமத்தில் ஒரு ஆசிரியராக நீங்கள் தயாரிக்கும் DIGITAL RESOURCE உலகம் முழுமைக்கும் உங்களை அடையாளப்படுத்தும்,அந்த வாய்ப்பை இந்தப் பயிற்சி தரும், பயிற்சி என்றுகூட சொல்லக்கூடாது, ORIENTATION எனலாம்.நான் ICT –AWARD க்காக என்னிடம் ஆசிரியர்கள் வருவார்கள்.அவர்கள் செய்துள்ளவற்றைப் பார்க்கும்போதெல்லாம் அதிசயமாக இருக்கும்,அவ்வளவு நல்லாப் பண்ணுவாங்க நம்ம டீச்சர்ஸ்.
எங்களுக்குத் தேவை …Simplicity, Sincerity, Dedicative that’s all. அதிகமாக உயர் வகுப்புகளுக்கான E-Content தயார் செய்ய வேண்டும் . நிறைய DIETs இருக்கு.அவர்களோடு நீங்கள் இணைந்து பணியாற்றி 3 மாதங்களுக்குள், இப்போதைய பணியின் முதல் தொகுப்பாக உங்கள் வளங்களைத் தர வேண்டும்.WISH YOU ALL THE BEST”….
இவை நமது கல்விச் செயலர் நமக்காகப் பேசியவை,எவ்வளவு நம்பிக்கையோடு வெளிப்படையாகப் பாராட்டினார். அவ்வளவு சந்தோஷம் நம் ஆசிரியர்களுக்கும்… நம்மை வாழ்த்திவிட்டு விடைபெற்றுவிட்டார் கல்விச் செயலர்.
அறிக்கை 

ஆசிரியர் தகுதித் தேர்வு சிக்கல் முதல்வர் தலையிட கோரிக்கை

ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் செய்யப்பட்டும் பணி நியமன சிக்கலைத் தீர்க்க முதல்வர் நேரடியாக தலையிட வேண்டும் என்று பொதுப்பள்ளிக்கான மாநிலமேடை கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
வெயிட்டேஜ் என்பது நால்வர் குழுவின் உருவாக்கமே தவிர முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை மேற்கொண்ட அரசின் கொள்கை முடிவல்ல.

வெயிட்டேஜ் முறையை பரிந்துரை செய்தவர்கள் வல்லுநர்கள் அல்ல. இது கூடுதல் மதிப்பு தரும் முறையே தவிர, அடிப்படைத்தகுதிக்கு கீழ் உள்ள தகுதிக்கு தரும் மதிப்பு அல்ல. தேசிய ஆசிரியர் கல்வி மன்றம் (என்சிஇஆர்டி) வழிகாட்டுதலில் பத்தி 9(பி) மிகத் தெளிவாக கூறியுள்ளது என்னவென்றால், டிஇடி தேர்வில் பெற்ற மதிப்பெண்ணுக்கு பணி நியமனத்தின் போது மதிப்பளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
எஸ்டி பிரிவில் 50 சதவீதத்துக் கும் மேல் பின்னடைவு காலிப் பணியிடங்கள் இதுவரை நிரப்பவில்லை. பொதுப் பிரிவில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் ஒருவர்கூட தேர்வாகவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். எனவே வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும் தீர்ப்புகள் வரும்வரை காத்திராமல், முதல்வர் நேரடியாக தலையிட்டு பணி நியமனம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.

ஐகோர்ட்டில் பட்டதாரி ஆசிரியர்கள் புதிய வழக்கு - தினகரன்


வேலை வாய்ப்பு பதிவு மூப்பின் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் ஆசிரியர்கள் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் வெயிட்டேஜ் மதிப்பெண் தரக்கூடாது. அதற்கு பதில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு மூப்பு அடிப்படையில் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்று கோரி ஆசிரியர் ஒருவர் சார்பாக வக்கீல் காந்திமதி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி ராமசுப்பிரணியம் விசாரித்து அரசு ஒரு வாரத்தில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

ஆசிரியர் பணி நியமனம் விவகாரம் முதல்வரின் வீட்டை மாற்றுத் திறனாளிகள் முற்றுகை

பட்டதாரி மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போயஸ்கார்டனில் முற்றுகையிட்டனர். ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் அனை வருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்.
ஆனால் 3% பேருக்குத்தான் பணி நியமனம் வழங்கப் போவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் சுமார் 200 பேர் தலைமைச் செயலகம் வந்தனர். முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து பேச அனுமதி கேட்டனர். ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் போயஸ் கார்டனுக்கு சென்று அங்கு முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, 2 பேரை மட்டும் அங்குள்ள அதிகாரிகள் கார்டனுக்குள் அனுமதித்தனர். அங்குள்ள அதிகாரிகள் மாற்றுத் திறனாளி ஆசிரியர்களிடம் பேசினர். பின்னர் வெளியில் வந்த ஆசிரியர் இருவரும் கூறியதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 934 பட்டதாரி ஆசிரியர் அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் எங்களின் கோரிக்கையை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. மொத்த நியமனத்தில் 3% பேருக்கு மட்டுமே பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் 934 பேருக்கு பணி நியமனம் கிடைக்காது. பொதுப் பிரிவில் வருவோரும் மாற்றுத் திறனாளிக்கான இடங் களை பெற்றுக் கொள்வார்கள். அதனால் மாற்றுத் திறனாளிகளுக்குரிய இடங்களில் அவர்களை மட்டுமே நிரப்ப வேண்டும். அதேபோல மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான பள்ளிகளில் மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். எஸ்எஸ்ஏ சிறப்பு ஆசிரியர் பணியை மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியருக்கே வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறோம். ஆனால் அரசு அதிகாரிகள் இது குறித்து எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளனர். ஒவ்வொரு முறையும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிக இடங்கள் ஒதுக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
ஆனால், அதன்படி அறிவிக்கவில்லை. எனவே நேரடியாக முதல்வரை சந்தித்து பேச வேண்டும் என்று கேட்டு தலைமைச் செயலகத்துக்கு வந்தோம். ஆனால் முதல்வரை சந்திக்க எங்களை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனவே நாங்கள் முதல்வரின் வீடு உள்ள போயஸ் கார்டனுக்கு வந்தோம். அங்கும் முதல்வரை சந்திக்க அனுமதிக்கவில்லை. அங்குள்ள அதிகாரி மட்டுமே எங்களிடம் பேசினார். கோரிக்கை குறித்து தெரிவித்தோம். ஆனால் சரியான பதில் ஏதும் கூறவில்லை.
இவ்வாறு மாற்றுத் திறனாளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

நீதிமன்றத் தீர்ப்பு எதிரொலி: 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை எப்போது கிடைக்கும்?

தகுதிகாண் மதிப்பெண்ணுக்கு (வெயிட்டேஜ் மதிப்பெண்) எதிரான மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதைத் தொடர்ந்து, பள்ளிக் கல்வித் துறையில் பணியிட ஒதுக்கீடு பெற்றுள்ள 13 ஆயிரம் ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் முறை மூலம் 10,698 பட்டதாரி ஆசிரியர்கள், 1,649 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்பட்டனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வு செப்டம்பர் 1 முதல் 5-ஆம் தேதி வரை ஆன்-லைன் மூலம் நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வு நடைபெறும்போதே, தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்ய தனி நீதிபதி இடைக்காலத் தடை விதித்தார்.
எனினும், பணியிடங்களை ஒதுக்கீடு செய்வதற்கான கலந்தாய்வைத் தொடர்ந்து நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டாலும், பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தகுதிகாண் மதிப்பெண் முறைக்கு எதிரான மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பின் நகல் தாக்கல் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின் உத்தரவு காரணமாக பணி நியமனத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை விலகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்றே புதிய ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் ??

புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.
இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது.

வெயிட்டேஜ்' பிரச்னைக்கு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு : கல்வி துறையை எதிர்த்து முற்றுகிறது போராட்டம்

வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், இன்று மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்ய, போராட்ட குழுவினர் முடிவு செய்து உள்ளனர்.ஆசிரியர் தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடுவதற்காக, தமிழக அரசு கொண்டு வந்த புதிய முறையை எதிர்த்து, தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க, தகுதி தேர்வை (டி.இ.டி.,), ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடத்துகிறது. தகுதி தேர்வில், 60 சதவீத மதிப்பெண், கல்வி தகுதியில், 40 சதவீத மதிப்பெண் என, 100 மதிப்பெண்ணுக்கு, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் கணக்கிடப்படுகிறது.
'கிரேடிங்' முறைபட்டதாரி ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 10; பட்டப் படிப்புக்கு, 15; பி.எட்., படிப்புக்கு, 15 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு, தகுதி தேர்வில், 60 சதவீதம், கல்வி தகுதியாக, பிளஸ் 2வுக்கு, 15; ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு, 25 சதவீதம் என, நிர்ணயிக்கப்பட்டது.
இந்த, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயத்தில், 'கிரேடிங்' முறை பின்பற்றப்பட்டது. அதாவது, பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்துக்கும் மேல் பெற்றிருந்தால், 10 மதிப்பெண்; 80 - 90 சதவீதம் பெற்றிருந்தால், 8; 70 - 80 சதவீதம் பெற்றிருந்தால், 6 என, கிரேடு முறை பின்பற்றப்பட்டது.
இதே போல், பட்டப் படிப்பில், பி.எட்., படிப்பில், 70 சதவீதம் மேல் பெற்றிருந்தால், 15 மதிப்பெண்; 50 - 70 சதவீதம் வரை பெற்றிருந்தால், 12 மதிப்பெண் என, பின்பற்றப்பட்டது.
தமிழக அரசு கையாண்ட, 'கிரேடிங்' முறையை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நாகமுத்து, ரத்து செய்தார். மதிப்பெண் கணக்கிடுவதற்கான புதிய முறையை கொண்டு வரும்படி, அரசுக்கு பரிந்துரை செய்தார். கடந்த, ஏப்ரலில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மே மாதம் முதல் அமல்இதையடுத்து, நீதிபதியின் பரிந்துரைப்படி, புதிய, 'வெயிட்டேஜ்' கணக்கிடும் முறையை, கடந்த மே மாதம், அரசு கொண்டு வந்தது. அதன்படி, தகுதி தேர்விலும், கல்வி தகுதி தேர்விலும், எவ்வளவு மதிப்பெண் பெறப்பட்டதோ, அதன் அடிப்படையில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது.
கடந்த, ஏப்ரலில், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு, அதைத் தொடர்ந்து, மே மாதம், பள்ளி கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
மனுக்களில், 'சரிவர பரிசீலிக்காமல், தனி நீதிபதி தெரிவித்த பரிந்துரையை, அரசு ஏற்றுக் கொண்டு, அரசாணை பிறப்பித்துள்ளது. தகுதி தேர்வில், இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, 60ல் இருந்து, 55 சதவீதம் என, தகுதி மதிப்பெண் அளவை குறைத்துள்ளனர். நிர்ணயிக்கப்பட்ட, தகுதி தேர்வு மதிப்பெண்ணை, குறைக்கும் அதிகாரம், அரசுக்கு இல்லை' என, கூறப்பட்டுள்ளது.
'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவு
மனுக்களை, நீதிபதிகள் அக்னிஹோத்ரி, எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் சோமயாஜி, சிறப்பு அரசு பிளீடர், டி.கிருஷ்ணகுமார், ஆஜராகினர். 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் வகுத்துள்ள வழிமுறைகளின்படி, தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவதற்கு, தமிழக அரசு, தன் அதிகாரத்தை செயல்படுத்தி உள்ளது. தகுதி மதிப்பெண் தளர்த்தப்பட்டதன் மூலம், தகுதி அடிப்படையில் மனுதாரர்களை பரிசீலிப்பதற்கான உரிமை பறிபோய் விடவில்லை.
கடந்த, 2013, ஆகஸ்டில், தகுதி தேர்வு நடத்தப்பட்டது. 2012, அக்டோபரில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் நிர்ணயித்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தேர்வு எழுதிய பின், அரசு பின்பற்றிய நடைமுறையை, மனுதாரர்கள் எதிர்க்க முடியாது.
மனுதாரர்கள், 'வெயிட்டேஜ்' முறையையும், தகுதி தேர்வில் மதிப்பெண் கணக்கிடும் முறையை கையாள்வதையும் எதிர்த்துள்ளனர். கல்வி தகுதிக்கு என, 40 சதவீத மதிப்பெண் நிர்ணயித்தது தொடர்பாக, இந்தப் பிரச்னையை முன்பு யாரும் எழுப்பவில்லை.
மூன்று விதமான தேர்வுகளை (பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட்., படிப்பு) அரசு பரிசீலனைக்கு எடுத்துள்ளது. இந்த அளவுகோல், நியாயமானது. படிப்பில் எடுத்த மதிப்பெண்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர் தேர்வு நடக்கவில்லை. ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 60 சதவீத மதிப்பெண் அளிக்கப்படுகிறது. மீதி, 40 சதவீதம் தான், அடிப்படை கல்வி தகுதிக்கு வழங்கப்படுகிறது.
எனவே, தகுதி தேர்வுக்கு, அரசு பின்பற்றியுள்ள மதிப்பெண் நடைமுறையை, தன்னிச்சையானது எனக் கூற முடியாது. அரசு பின்பற்றும் நடைமுறை சரியல்ல என, மனுதாரர்கள் தான் விளக்க வேண்டும்.முன்பு பின்பற்றிய நடைமுறை (கிரேடிங்) சரியில்லை எனக் கூறி, அதை, தனி நீதிபதி ரத்து செய்துள்ளார். அதனால், முரண்பாடுகளை, அரசு சரியாகவே நீக்கி உள்ளது.
மற்ற மாநிலங்களான, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகியவற்றில் பின்பற்றப்படும் நடைமுறையை ஒப்பிடும் போது, தமிழகத்தில் பின்பற்றப்படும் நடைமுறை சரியானது தான். அரசு பின்பற்றும் முறையில் நியாயமில்லை என, மனுதாரர்களால் விளக்க முடியவில்லை.
தனி நீதிபதியின் பரிந்துரையில், எந்த தவறும் இல்லை. அதைத் தொடர்ந்து, அரசு பிறப்பித்த உத்தரவிலும், எந்த சட்ட விரோதமும் இல்லை. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.
இவ்வாறு, 'டிவிஷன் பெஞ்ச்' உத்தரவிட்டுள்ளது.
இப்பிரச்னை குறித்து, போராட்டக் குழுவினர், உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
தீர்ப்பு, எங்களுக்கு, அதிர்ச்சியை அளித்துள்ளது. இது, எங்கள் வாழ்க்கை பிரச்னை. எனவே, உச்ச நீதிமன்றத்திடம் முறையிட, முடிவு செய்துள்ளோம்.நாளை (இன்று), மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்வோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தடையை நீக்க கோரிஇன்று மனு தாக்கல்
புதிய ஆசிரியர் நியமனத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை வழங்கிய இடைக்கால தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்கிறது.
'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை, சென்னை உயர் நீதிமன்றம், நேற்று தள்ளுபடி செய்தது.
இதன் அடிப்படையில், ஆசிரியர் நியமனத்திற்கு வழங்கியுள்ள தடையை நீக்கக் கோரி, தமிழக அரசு, இன்று மனு தாக்கல் செய்ய இருப்பதாக, கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும், அடுத்த ஒரு மணி நேரத்தில், ஆசிரியர் நியமனம் செய்யும் பணி நடக்கும் எனவும், கல்வித் துறை தெரிவித்தது.

அரசு பள்ளிகளின் பலநாள் கனவு! 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க தீவிரம்

மதுரை மாவட்ட அரசு பள்ளிகளில் 93 ஆய்வக உதவியாளர்களை நியமிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால், அரசு பள்ளிகளின் பலநாள் கனவு நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 உட்பட அறிவியல் பாடங்களுக்கான செய்முறை வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்துவதற்கு ஆய்வக உதவியாளர்கள் பணி மிக முக்கியம். ஆய்வகங்கள் மற்றும் உபகரணங்களை பராமரிப்பது இவர்களின் பொறுப்பு. இப்பணியிடங்கள் பல பள்ளிகளில் காலியாக இருந்ததால் ஆய்வகங்கள் சரிவர பராமரிப்பின்றி பெயரளவில் உள்ளன.அரசு பள்ளிகளில் இப்பணியிடங்களை நிரப்புவதற்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டன. இதன் எதிரொலியாக, மாநிலம் முழுவதும் 4393 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, மதுரை மாவட்டத்தில் 93 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், மதுரை, மேலுார், உசிலம்பட்டி கல்வி மாவட்டங்களில், பதிவறை எழுத்தர், அடிப்படை பணியாளர்களுக்கு பதவி உயர்வு மூலம் 26 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 67 பணியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில், இதற்கான பதிவு மூப்பு பட்டியலை கல்வித்துறை கோரியுள்ளது. பட்டியல் கிடைத்ததும் மீதமுள்ள 67 இடங்கள் நிரப்பப்படும்.
முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி கூறுகையில், "பதவி உயர்வு அடிப்படையில் மேலுார் கல்வி மாவட்டத்தில் 9, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் 5, மேலுார் கல்வி மாவட்டத்தில் 12 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 67 பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு பட்டியல் அடிப்படையில் இன்னும் சில நாட்களில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

பள்ளிகளில் பணி நியமனத்தில் அமைச்சர் சிபாரிசு தொழில்துறை செயலர் ஆஜராக உத்தரவு

அமைச்சர், எம்.எல்.ஏ.,க்கள் சிபாரிசு அடிப்படையில் பள்ளிகளில் நடந்த வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் நியமனத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கில், விசாரணை அதிகாரியான தொழில்துறை முதன்மைச் செயலாளர் சங்கர் ஆஜராக, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருப்பரங்குன்றம் கணேசன் தாக்கல் செய்த மனு:உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு, தகுதியானவர்களின் பெயர்களை மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் 2012 ஜூன் 6 ல் பரிந்துரைத்தது. வாட்ச்மேன் பணிக்காக 2012 ஜூன் 14 ல் மேலூர் கல்வி மாவட்ட அலுவலக நேர்காணலில் பங்கேற்றேன். நான் வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி. எனக்கு தகுதி இருந்தும், பணி நியமனம் வழங்கவில்லை.உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் வாட்ச்மேன், துப்புரவு பணியாளர்கள் நியமனத்திற்கு 28 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள், கூட்டுறவுத்துறை அமைச்சர், மதுரை வடக்குத் தொகுதி, மதுரை தெற்கு, உசிலம்பட்டி, திருமங்கலம் எம்.எல்.ஏ.,க்கள், மதுரை மாவட்டச் செயலாளர், தொட்டியம் மாவட்டச் செயலாளர் சிபாரிசுப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் (16 பேர்) என தனித்தனியே பிரித்து பட்டியலிடப்பட்டுள்ளது. பணி நியமனத்தை ரத்து செய்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என குறிப்பிட்டார்.
விசாரணை அதிகாரியான தொழில்துறை முதன்மைச் செயலாளர் சி.வி.சங்கர், 'பணி நியமனம் முறையாக நடந்துள்ளது. தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசியல்வாதிகளின் சிபாரிசு அடிப்படையில் நியமனம் நடந்துள்ளதாக கூற முடியாது,' என அறிக்கை தாக்கல் செய்தார். இதில் தனிநீதிபதி அதிருதிப்தியை வெளியிட்டார்.நீதிபதி எஸ்.நாகமுத்து முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பாலமுருகன் ஆஜரானார். அரசு வக்கீல் கால அவகாசம் கோரினார்.நீதிபதி: வழக்கு விசாரணைக்குத் தேவையான ஆவணங்கள் உள்ள நிலையில், கால அவகாசம் எதற்கு? அவசரம் கருதி, விசாரணை இன்று(செப்., 23) ஒத்திவைக்கப்படுகிறது. விசாரணை அதிகாரி சங்கர், ஐகோர்ட்டில் ஏற்கனவே பெற்ற அசல் ஆவணங்களுடன், இன்று காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும், என்றார்.

காலாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் மாற்றம்

பிளஸ் 2 மற்றும் ௧௦ம் வகுப்பு காலாண்டுத் தேர்வு விடைத்தாள்களை, பொதுத்தேர்வு பாணியில், வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, அரசுப் பள்ளி ஆசிரியர் சிலர் கூறியதாவது:வழக்கமாக, காலாண்டுத் தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடக்கும். ஆனால், விடைத்தாள் திருத்தும் பணி, அந்தந்த பள்ளியிலேயே நடக்கும்.
இந்த ஆண்டு, ஒரு பள்ளியின் விடைத்தாளை, அருகில் உள்ள வேறொரு பள்ளிக்கு அனுப்பி, மதிப்பீடு செய்ய வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.அனைத்துப் பள்ளிகளின் விடைத்தாள்களும், மாவட்டத்திற்குள் உள்ள, வெவ்வேறு பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இதனால், மதிப்பீடு, சரியான முறையில் இருக்கும் என, கல்வித் துறை கருதுகிறது.இதற்கு, வெவ்வேறு பள்ளி ஆசிரியரை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்தி இருக்க வேண்டும். பொதுத்தேர்வில், ஒரு பள்ளியின் ஆசிரியர், அதே பள்ளியில், பணியில் இருக்க மாட்டார். வேறொரு பள்ளிக்கு அனுப்பப்படுவார். தற்போது, அதுபோல் நடக்கவில்லை.
இதனால், 'தம் பள்ளி மாணவரின் விடைத்தாளை, வேறொரு பள்ளி ஆசிரியர், கடுமையான முறையில் திருத்தி, மதிப்பெண்ணை குறைத்துவிட்டால், அதிகாரிகள் 'அர்ச்சனைக்கு' ஆளாவோம்' என, ஒரு பள்ளியின் ஆசிரியர் நினைக்கலாம். இதனால், ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கு, ஆசிரியரே, விடையை கூறுவதற்கும் வாய்ப்பு உள்ளது.இதுபோன்ற பிரச்னைகளையும் சரி செய்தால், அனைத்துப் பணிகளும், பொதுத்தேர்வு போன்று நடக்கும். இதனால், தேர்ச்சி எந்த அளவிற்கு இருக்கும் என்பதையும், ஓரளவு அறிய முடியும்.
இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.இரு வகுப்பு தேர்வுகளும், ஏற்கனவே துவங்கி, பல தேர்வுகள் முடிந்து விட்டன. மீதமுள்ள சில தேர்வுகள், வரும் 26ம் தேதி வரை நடக்கிறது என்பது, குறிப்பிடத்தக்கது.