பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. தனித்தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறைத்தேர்வு கோவையில் தொடங்கியது.
எஸ்.எஸ்.எல்.சி.பொதுத்தேர்வு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 3-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்வு வருகிற 25-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு வருகிற 26-ந் தேதி தொடங்கி, அடுத்த மாதம்(ஏப்ரல்) 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த தேர்வை கோவை மாவட்டத்தில் 44 ஆயிரத்து 606 பேர் எழுதுகிறார்கள். தனித்தேர்வர்களாக 1,079 எழுதுகிறார்கள். கோவை கல்வி மாவட்டத்தில் 98 மையங்களிலும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 36 மையங்களிலும் என 134 மையங்களில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடக்கிறது.
தனித்தேர்வர்கள்
இதில் கோவை கல்வி மாவட்டத்தில் 36 ஆயிரத்து 457 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். தனித்தேர்வர்களை பொறுத்தவரை 531 பேர் எழுதுகிறார்கள். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை பொறுத்தவரை 8 ஆயிரத்து 149 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். 548 பேர் தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
இந்தநிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்க கடந்த 14 மற்றும் 15-ந் தேதிகளில் சிறப்பு மையங்கள் மூலமாக பதிவு செய்யும் பணி நடைபெற்றது. இதில் கோவை கல்வி மாவட்டத்தில் 280 பேர் விண்ணப்பித்தனர். இதேபோல் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து உள்ளனர். இதன்படி கோவை மாவட்டத்தில் 1,500-க்கும் மேற்பட்ட தனித்தேர்வர்கள் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு எழுதுகிறார்கள்.
செய்முறை தேர்வு
இந்தநிலையில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் நிறைவு பெற்றது.
தனித்தேர்வர்களாக பொதுத்தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் செய்முறை தேர்வு கோவையில் நேற்று தொடங்கியது.
இந்த செய்முறை தேர்வு 22-ந் தேதி வரை நடக்கிறது. தனித்தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள், அரசு தேர்வுகள் துறை இணையதளத்தில் இருந்து தங்களுக்கான நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment