ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 55 சதவீதம் மதிப்பெண்களே போதும் என்று தமிழக முதல்வர் ஜெயலிதா நேற்று சட்டப்பேரவையில் அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவை யில் ஆளுநரின் உரைக்கு, நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஜெயலலிதா பதில் அளித்து பேசியதாவது:ஆசிரியர் தகுதி தேர்வில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு மதிப்பெண்ணில் சலுகை வழங்கப்பட வேண்டும் என்று பலர் வேண்டுகோள் வைத்தனர்.2009ம் ஆண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் மத்திய அரசால் இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்படி, பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்கள் அரசால் நியமிக்கப்பட்ட நிறுவனத்தால், நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தின் அறிவிக்கைகளின்படி, 1 முதல் 5ம் வகுப்புக்கான இடைநிலை ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒழுங்குமுறை விதிகள் 2002ன் படி, ஆசிரியர் பயிற்சியில் இரண்டாண்டு பட்டய படிப்பும், மேல்நிலை தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.2002ம் ஆண்டு ஒழுங்கு விதிமுறைகளுக்கு முன் இரண்டாண்டு பட்டய படிப்பு தேர்ச்சி பெற்றிருந் தால், மேல்நிலை தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று, 6 முதல் 8ம் வகுப்புக்கான பட்டதாரி ஆசிரியர்கள், தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் ஒழுங்குமுறை விதி 2002ன் படி, ஓராண்டு பி.எட். பட்டமும், பட்டப்படிப்பில் 45 சதவீத மதிப்பெண்களும் பெற்றிருக்க வேண்டும். 2002ம் ஆண்டுக்கு முன் பி.எட். பட்டம் பெற்றிருந்தால், பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
இதன்பின்னர், தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தால் 1.4.2011 அன்று வெளியிடப்பட்ட கடிதத்தில், அந்தந்த மாநிலங்களில் கடைபிடிக்கப்படும் இடஒதுக்கீட்டு கொள்கைக்கு ஏற்ப, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு மேல்நிலை தேர்வு, பட்டப்படிப்பு தேர்வில் குறைந்த பட்ச மதிப்பெண்களில் 5 சதவீதம் தளர்வு அளிக்கலாம் என தெரிவித்துள்ளது.இதன்படி, 2002 ஆம் ஆண்டுக்கு பின் ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பை முடித்தவர்கள் மேல்நிலை தேர்வில் 40 சதவீத மதிப்பெண்ணும், அதற்கு முன்னர் தேர்வு பெற்றவர்கள் 45 சதவீத மதிப்பெண்ணும் பெற்றிருக்க வேண்டும்.ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் பெற வேண்டும் என தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்தந்த மாநிலத்தில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையின்படி தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்க பரிசீலிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அவையில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற 60 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இனி தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லீம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோ ருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை வழங்கப்படும்.அதாவது மேற்கண்ட பிரிவினர், ஆசிரியர் தகுதி தேர்வில் இனி 55 சதவீதம் மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெற்றவர்கள் என அறிவிக்கப்படுவார்கள்.இந்த சலுகை தற்போது ஆகஸ்ட் 2013ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்டுள்ள தகுதி தேர்வுக்கும் பொருந்தும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.
No comments:
Post a Comment