மக்களவைத் தேர்தலை முன்னிட்டு புதுவை மாவட்டத்தில் 3,224 அரசு ஊழியர்களுக்கு தேர்தல் பணி ஆணைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. பயிற்சிக்கு வராதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாவட்டத்தேர்தல் அலுவலர் தீபக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
புதுவை மாவட்டத்தில் உள்ள 23 பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய 654 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குச்சாவடி அதிகாரிகளாக மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 3,224 அரசு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தேர்தல் பணி ஆணை மற்றும் பயிற்சி வகுப்புக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடமிருந்து தேர்தல் பணிச்சான்று (படிவம் 12-B) பெற்றுக் கொண்டு வாக்குப்பதிவின் போது பணியில் இருக்கும் வாக்குச்சாவடியிலேயே வாக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.
3 கட்ட பயிற்சி
வாக்குச்சாவடி அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் 3 கட்டங்களாக நடக்க உள்ளன. அதிகாரிகளுக்கான முதல் பயிற்சி வகுப்பு வரும் 22, 23 ஆகிய தேதிகளிலும், மற்றும் பிற வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 26, 27 தேதிகளிலும் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கண்காணிப்பில் நடைபெறவுள்ளது.
பயிற்சிக்கு வராத பணியாளர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment