Flash News

Flash News அன்பார்ந்த ஆசிரிய பெருமக்களே! இந்த வலை தளத்தில் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு தேவையான அடிப்படை கணித செயல்பாடுகளுக்கான விளையாட்டுகள் மற்றும் ஆங்கில விளையாட்டுகள் தரப் பட்டுள்ளன. அவற்றைக் கண்டு பள்ளிகளில் செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...01.07.2014 முதல் அகவிலைப்படி 7% உயருகிறது. ...

Tuesday, 4 March 2014

பிளஸ் 2 தேர்வு: புதிய மாற்றங்களுக்கு வரவேற்பு

பிளஸ் 2 பொதுத்தேர்வு மொழிப்பாடம் முதல் தாளுடன் திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்கியது.
இந்த ஆண்டு பிளஸ் 2 தமிழ் முதல் பாட வினாத்தாள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு மதிப்பெண் வினாக்கள் மட்டும் சற்று சிந்திக்கும் வகையில் அமைந்திருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாள் பக்கங்கள் அதிகரிப்பு, மாணவர்கள் முன்னிலையில் வினாத்தாள்கள் பிரிப்பு, விடைத்தாள் முதல் பக்கத்தில் அனைத்து விவரங்களையும் அச்சிட்டு வழங்கியது, தேர்வுப் பணிகளில் வேலைப்பளு குறைப்பு போன்ற பல்வேறு மாற்றங்களுக்கு ஆசிரியர்களும், மாணவர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
மொழிப்பாடம் என்பதால் விடைத்தாள் புத்தகத்தில் உள்ள 38 பக்கங்களில் அதிகபட்சமாக 25 பக்கங்கள் வரை மட்டுமே பயன்படுத்தியதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கியப் பாடங்களுக்கு பக்க அதிகரிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை நடைபெற்ற தேர்வில் காப்பியடித்ததாக 7 மாணவர்கள் பிடிபட்டனர். இவர்களில் 6 பேர் தனித்தேர்வர்கள், ஒருவர் பள்ளி மாணவர்.
திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்களில் தலா 2 பேரும், வேலூர், விழுப்புரம், காரைக்காலில் தலா ஒருவரும் பிடிபட்டுள்ளனர்.
வரும் 25-ஆம் தேதி வரை நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பள்ளிகளின் மூலமாக 8.26 லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்களாக 53 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.
இவர்களுக்காக மாநிலம் முழுவதும் 2,242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் தலைமையிலான பறக்கும் படையினர் தேர்வு மையங்களை கண்காணித்தனர்.
வாகனங்களில் வந்த வினாத்தாள்: வழக்கமாக, வினாத்தாள் பாதுகாப்பு மையங்களிலிருந்து இருசக்கர வாகனங்களிலும், ஆட்டோக்களிலும்தான் தேர்வு மையங்களுக்கு எடுத்துவரப்படும். ஆனால், இந்த ஆண்டு வினாத்தாள்களை எடுத்துவர கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
இதனால், பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திலும் வினாத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வந்ததாக கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
எளிமையாகிவிட்ட தேர்வுப் பணிகள்: பொதுத்தேர்வின் போது மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்கீடு செய்வது, தேர்வறைகளுக்கான வினாத்தாள்களைப் பிரித்து வழங்குவது, விடைத்தாள்களில் முத்திரையிடுவது போன்ற பல்வேறு பணிகள் தேர்வுக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும். எனவே, தேர்வு மையங்கள் பரபரப்பாக இருக்கும்.
ஆனால், இந்த ஆண்டு தேர்வின்போது வேலைப்பளுவையும், தவறுகளையும் குறைப்பதற்காக புதிய மாற்றங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இதனால், தேர்வுப் பணிகள் மிகவும் எளிமையாகிவிட்டதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் கே.தேவராஜன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:
மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்கீடு, ஒரு கவரில் 20 வினாத்தாள்கள் என பிரித்து வழங்கியது போன்ற நடவடிக்கைகளால் தேர்வுப் பணியில் ஈடுபடுவோரின் வேலைப்பளு பெருமளவு குறைந்துள்ளது. எனவே, பல தேர்வு மையங்களில் கண்காணிப்புப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த முடிந்ததாக தேர்வு கண்காணிப்பாளர்கள் எங்கள் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
தேர்வு நாளன்று தபால் துறையினரிடம் குறிப்பிட்ட நேரத்துக்குள் பார்சலை ஒப்படைப்பதற்காக தேர்வு கண்காணிப்பாளர்கள் பதற்றத்தோடு இருப்பார்கள். இப்போது எங்களது வாகனங்களிலேயே விடைத்தாள்களை மாவட்ட மையங்களுக்கு எடுத்துச்செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
விடைத்தாள்களை எடுத்துச்செல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரத்யேக வாகனங்கள் பணியமர்த்தப்பட்டன. விடைத்தாள்களை மாவட்ட மையங்களுக்கு மாலை 6 மணிக்குள் கொண்டுவந்தால் போதும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, பதற்றமில்லாமல் விடைத்தாள்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு மையங்களுக்குக் கொண்டுவரப்பட்டதாக தேவராஜன் கூறினார்.

No comments:

Post a Comment