திண்டுக்கல் முத்தழகுபட்டியில் மாணவர்களுக்கு தலை முடியை வெட்டிய தலைமை ஆசிரியை கண்டித்து பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். திண்டுக்கல் முத்தழகுபட்டியில் பிராசின்ஸ் சேவியர் துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, ஐந்து மாணவர்களை தலைமை ஆசிரியை ஸ்டெல்லாபாய் முடிவெட்டி வருமாறு தொடர்ந்து கூறிவந்தார். இதை மாணவர்கள் கேட்கவில்லை.
ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியை, 5 ம் வகுப்பு மாணவர்கள் விஜயராஜ், மனோஜ், நிர்மல், நவீன், செபாஸ்டீன் ஆகியோருக்கு, அவரே கத்திரிக்கோலால் முடியை வெட்டினார். பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவர்களை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து பள்ளியை நேற்று மாலை பெற்றோர்களுடன் அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பெற்றோர்கள் கூறியதாவது: தலைமை ஆசிரியை இதுவரை 13 மாணவர்களுக்கு தொடர்ந்து முடி வெட்டியுள்ளார். தற்போது ஐந்து பேருக்கு ஒரே நேத்தில் முடி வெட்டியுள்ளார். இவரை மாற்றும் வரை நாங்கள் போராட்டம் நடத்துவோம், என்றனர். ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் எஸ்.ஐ., பாண்டியராஜன் தலைமையிலான போலீசார், பொதுமக்களை சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.
தலைமை ஆசிரியை ஸ்டெல்லாபாய் கூறுகையில், "மாணவர்களிடம் பல முறை கூறியும் அவர்கள் முடி வெட்டி வரவில்லை. மாணவர்களுக்கு வெயில் நேரத்தில் வேர்த்து சளி பிடிக்கும் என்ற நல்ல எண்ணத்தில்தான் நான் தலை முடியை வெட்டினேன். ஆனால், இது இவ்வளவு பெரிய பிரச்னையாகும் என்று நினைக்கவில்லை, என்றார்.
No comments:
Post a Comment